மற்ற தொடர்கள் மாதிரி இல்ல.. உலக கோப்பையில அவங்க 2 பேரும் தெறிக்கவிடுவாங்க பாருங்க!! எங்களோட பலமே அவங்க 2 பேருதான்.. கேப்டன் கோலி அதிரடி

By karthikeyan VFirst Published Apr 19, 2019, 4:51 PM IST
Highlights

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 
 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பார்க்கப்படுகின்றன. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் வலுவாக இருந்தாலும், இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்குமே உலக கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் ரோஹித், தவான், கோலி என டாப் ஆர்டர் பேட்டிங்கும் பும்ரா, புவி, ஷமி என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் குல்தீப், சாஹல் என ஸ்பின் பவுலிங் யூனிட்டும் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. 

அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடி இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. அவர்களுக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த ஸ்பின் வரப்பிரசாதம் தான் குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி. இருவருமே ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பதால் எதிரணி வீரர்களால் இவர்களை எளிதாக கையாளமுடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் எதிரணிகளில் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையை சரித்துள்ளனர். 

குறிப்பாக குல்தீப் யாதவின் கையசைவுகளை கணிக்க முடியாமல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து அணிகளுமே அவரிடம் சரணடைந்துள்ளனர். குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி வெற்றிகரமான ஜோடியாக திகழ்ந்துவருகிறது. ரிஸ்ட் ஸ்பின்னர்களான இவர்களின் கையசைவுகளை எதிரணி பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாததே இவர்களது பெரிய பலம். அது அணிக்கு மிகவும் பயன்படுகிறது. 

உலக கோப்பை நெருங்கியுள்ள நிலையில், இந்தியா டுடேவிற்கு கேப்டன் கோலி அளித்த பேட்டியில் இவர்கள் இருவரும் தான் உலக கோப்பையில் இந்திய அணியின் பெரிய பலமாக இருப்பார்கள் என கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, ரிஸ்ட் ஸ்பின் ஜோடி தான் உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலமாக திகழப்போகிறது. உலக கோப்பை தொடர் மற்ற தொடர்களை போன்றதல்ல. இரு அணிகளுக்கு இடையேயான தொடர் என்றால், ஒரு போட்டியில் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்தாலும் அடுத்த போட்டியில் அதற்கான தயாரிப்புகளுடன் வரலாம். ஆனால் உலக கோப்பையில் ஒரு அணி, மற்றொரு அணியுடன் ஒரேயொரு முறைதான் மோதும். அதனால் ஒவ்வொரு போட்டியும் வெவ்வேறு அணிகளுடன் என்பதால், குல்தீப்பும் சாஹலும் பவுலிங்கில் மிரட்டிவிடுவார்கள்.

குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி மிடில் ஓவர்களில் சீராகவும் தொடர்ச்சியாகவும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார்கள். இவர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதால் டெத் ஓவர்களில் நெருக்கடி இல்லாமல் வீசுவதற்கு எளிதாகிறது என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். 
 

click me!