ஐபிஎல் 2020: இந்த டீம்லாம் தேறவே தேறாது.. கடைசி இடத்தைத்தான் பிடிக்கும்.. முன்னாள் வீரர் கடும் தாக்கு

By karthikeyan VFirst Published Sep 11, 2020, 3:05 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி இடத்தைத்தான் பிடிக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஸ்பின்னரும் கேகேஆர் அணியின் முன்னாள் வீரருமான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த சீசனில் புதிய கேப்டன், புதிய தலைமை பயிற்சியாளர்களின் தலைமையில் செயல்படுகிறது. இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக லெஜண்ட் அனில் கும்ப்ளே செயல்படுகிறார். இளம் துடிப்பான மற்றும் அதிரடி வீரரான கேஎல் ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.

கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில், கிறிஸ் கெய்ல், மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரான் ஆகிய வெளிநாட்டு அதிரடி வீரர்களும், மயன்க் அகர்வால், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங் ஆகிய உள்நாட்டு சிறந்த வீரர்களும் என நல்ல கலவையிலான அணியாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு முகமது ஷமி இருக்கிறார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் மற்றும் நியூசிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஆகியோரும் ஸ்பின்னர்கள் முஜீபுர் ரஹ்மான், முருகன் அஷ்வின் ஆகியோரும் உள்ளனர்.

அனில் கும்ப்ளேவின் பயிற்சியில் கேஎல் ராகுலின் கேப்டன்சியில் முதல் முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் தீவிரமாக தயாராகிவரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த சீசனில் கடைசி இடத்தைத்தான் பிடிக்கும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஸ்பின்னரும் கேகேஆர் அணியின் முன்னாள் வீரருமான பிராட் ஹாக் ஓபனாக பேசியுள்ளார்.

தனது யூடியூப் சேனலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி குறித்து பேசிய பிராட் ஹாக்,  என்னை பொறுத்தமட்டில் பஞ்சாப் அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்களில் முஜீபுர் ரஹ்மான் மற்றும் கிறிஸ் ஜோர்டான் ஆகிய இருவரைத்தவிர மற்றவர்கள் அனைவருமே மேட்ச் வின்னர்கள் தான். இவர்கள் இருவரும் நல்ல பவுலர்கள். அவர்களுக்கென்று தனி ரோல் உள்ளது.

ஆனால், மேக்ஸ்வெல், கெய்ல், ஜிம்மி நீஷம் ஆகியோர் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் அல்ல. சில போட்டிகளில் நன்றாக ஆடுவார்கள்; சில போட்டிகளில் படுமோசமாக சொதப்பிவிடுவார்கள். ஐபிஎல் அணிக்கு ஒரு வெளிநாட்டு வீரரிடமிருந்து என்ன தேவையோ அதை தொடர்ச்சியாக வெளிப்படுத்தக்கூடிய வீரர்கள் அல்ல. எனவே அந்த அணியில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பெரிய பிரச்னை. இந்த சீசனில் கடைசி இடத்தைத்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் பிடிக்கும் என்று பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். 

Also Read - ஐபிஎல்லில் 8 அணிகளில் ஆடிய ஒரே வீரர் யார் தெரியுமா..? தகர்க்க முடியாத சாதனையை தன்னகத்தே கொண்ட ஆஸி., வீரர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்:

கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், அர்ஷ்தீப் சிங், தர்ஷன் நால்கண்டே, ஹார்டஸ் வில்ஜோயன், ஹர்ப்ரீத் ப்ரார், கருண் நாயர், மந்தீப் சிங், முகமது ஷமி, முஜீபுர் ரஹ்மான், முருகன் அஷ்வின், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், கிருஷ்ணப்பா கௌதம், ஜெகதீஷா சுஜித், மேக்ஸ்வெல், கோட்ரெல், கிறிஸ் ஜோர்டான், ரவி போஷ்னோய், ப்ரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஜிம்மி நீஷம், தஜிந்தர் திலான், இஷான் போரெல். 
 

click me!