ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கான தேதியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் 10 அணிகள் இந்த சீசனில் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன.
மெகா ஏலத்துக்கு முன்பாக புதிய அணிகள் இரண்டும் தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் பெரிய வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால் இந்த ஏலத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ள 896 இந்திய வீரர்கள் மற்றும் 318 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 1214 வீரர்கள் அவர்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மெகா ஏலத்திற்கான தேதி மற்றும் ஐபிஎல் தொடங்கும் தேதி ஆகியவற்றை அறிவித்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
ஐபிஎல் அணி உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12-13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும். ஐபிஎல் போட்டிகள் மார்ச் - மே காலக்கட்டத்தில் நடைபெறும். மார்ச் இறுதியில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என ஜெய் ஷா அறிவித்தார்.
ஏலம் பிப்ரவரி 12-13 தேதிகளில் தான் நடக்கும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதி செய்துள்ளார் ஜெய் ஷா. மார்ச் 27ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கலாம் என்று தகவல் வெளிவந்திருந்த நிலையில், மார்ச் மாத இறுதியில் போட்டிகள் தொடங்கும் என்று கிட்டத்தட்ட அந்த தகவலையும் உறுதி செய்துள்ளார் ஜெய் ஷா.