தோனி விவகாரத்தில் முதல் முறையாக மௌனம் கலைத்த தாதா

By karthikeyan VFirst Published Nov 30, 2019, 2:21 PM IST
Highlights

உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பெறாத தோனியின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்கள் வலுத்துவரும் நிலையில், கங்குலி இதுகுறித்து தனது மௌனத்தை கலைத்துள்ளார்.
 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி, உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் ஓய்வை பற்றி சற்றும் யோசிக்காத தோனி, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரிலிருந்து ஒதுங்கினார். 

இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்கும் பணியை இந்திய அணி ஏற்கனவே தொடங்கிவிட்டதால், தோனி ஓய்வு அறிவிக்காவிட்டாலும் இனிமேல் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. அதை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்தே வெளிப்படையாக தெரிவித்திருந்தார். 

அதனால் தோனிக்கு ஃபேர்வெல் போட்டி மட்டும் ஏற்பாடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு தொடருக்குமான இந்திய அணி அறிவிக்கப்படும் முன், தோனியுடனான தனது ஏதாவது ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கேப்டன் கோலி டுவீட் செய்வதால், தோனி அணியில் இடம்பெறுவாரோ என்ற சந்தேகமும் விவாதமும் எழுந்துவிடுகிறது. 

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால், அவருக்குத்தான் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோனி புறக்கணிக்கப்பட்டார். அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் வந்து ஆடவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியிலும் தோனி இல்லை. 

இந்நிலையில், தோனி மீண்டும் அணியில் இடம்பெறுவாரா? டி20 உலக கோப்பையில் ஆடுவாரா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. தோனியின் கிரிக்கெட் எதிர்காலம்தான் கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவருகிறது.

தோனி இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்திருந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, டி20 உலக கோப்பைக்கு முந்தைய கடைசி பெரிய தொடர் ஐபிஎல் தான். எனவே ஐபிஎல்லில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்தும், ஐபிஎல்லில் மற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதை பொறுத்தும்தான் தோனி அணியில் எடுக்கப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் செய்தியாளர்கள், இந்திய அணியில் அவருக்கான எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த தோனி, ஜனவரி மாதம் எதுவும் கேட்காதீர்கள். அதுவரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள கங்குலி, தோனி விஷயத்தில் ரொம்ப தெளிவாக இருக்கிறோம். ஆனால் அனைத்தையும் வெளிப்படையாக பொதுவெளியில் பேசமுடியாது. நேரம் வரும்போது உங்களுக்கு தெரியும் என்று கங்குலி தெரிவித்தார். 

மேலும், கிரிக்கெட் வாரியம், தோனி, தேர்வாளர்களுக்கு இடையே எல்லாமே வெளிப்படையாக உள்ளது. தோனி மாதிரியான சாம்பியன்கள் விஷயத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது என்றார். 
 

click me!