ஸ்டூவர்ட் பின்னி கர்நாடக கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை பொன்னெழுத்துக்களால் பொறிக்கணும்..! தாதா புகழாரம்

By karthikeyan VFirst Published Aug 31, 2021, 2:52 PM IST
Highlights

அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நேற்று ஓய்வு அறிவித்த கர்நாடகாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னிக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.
 

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பின்னி. 1983ல் உலக கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் ஆடியவர். கர்நாடகாவை சேர்ந்த ரோஜர் பின்னியின் மகன் ஸ்டூவர்ட் பின்னி. இவர் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறந்து விளங்கிய சிறந்த ஆல்ரவுண்டர்.

இந்திய அணிக்காக 6 டெஸ்ட், 14 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணியில் ஆடிய ஸ்டூவர்ட் பின்னிக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 2016ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஆடவில்லை.

சர்வதேச கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட மிகச்சிறந்த வீரர் ஸ்டூவர்ட் பின்னி. முதல் தர கிரிக்கெட்டில் 17 ஆண்டுகள் ஆடினார். 95 முதல் தர போட்டிகளில் ஆடி 4796 ரன்களை குவித்ததுடன், 148 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகா அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார். 2013-2014ல் கர்நாடகா ரஞ்சி டிராபியை வென்ற அணியில் ஸ்டூவர்ட் பின்னியும் ஆடினார். 

37 வயதான ஸ்டூவர்ட் பின்னி அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நேற்று ஓய்வு அறிவித்தார். இந்நிலையில், ஸ்டூவர்ட் பின்னி குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ஸ்டூவர்ட் பின்னியின் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள். முதல் தர கிரிக்கெட் தான், சர்வதேச கிரிக்கெட்டுக்கான அடிப்படை. அந்தவகையில், ஸ்டூவர்ட் பின்னி முதல் தர கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். கர்நாடக கிரிக்கெட்டுக்கு ஸ்டூவர்ட் பின்னி ஆற்றியுள்ள பங்களிப்பு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்று கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.
 

click me!