ரோஹித் கேப்டனாவதற்கு இதுவே சரியான தருணம்.. பிசிசிஐ அதிகாரி அதிரடி

By karthikeyan VFirst Published Jul 16, 2019, 10:29 AM IST
Highlights

2 ஆண்டுகால தேடுதல் படலத்திற்கு பிறகும் சரியான மற்றும் தகுதியான 4ம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு, நல்ல வீரர்கள் இல்லை என்பது காரணமல்ல. அணியின் நலன் கருதி நடுநிலையோடு செயல்பட்டு சிறந்த வீரரை அடையாளம் கண்டு இவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை என்பதே உண்மை. 
 

உலக கோப்பை தோல்வியை அடுத்து இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உலக கோப்பை தோல்வி மட்டுமே இதற்கு காரணமில்லை.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய  அணி, அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 240 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டமுடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. 

இந்த தோல்வி பல கேள்விகளையும் அதிருப்திகளையும் அணி நிர்வாகத்தின் மீது ஏற்படுத்தியது. இந்திய அணி பொதுவாகவே டாப் ஆர்டர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் நன்றாக ஆடிவிடுவதால் மிடில் ஆர்டர் சிக்கல் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால் அரையிறுதி போட்டியில் டாப் ஆர்டர்கள் சோபிக்காத நிலையில், மிடில் ஆர்டரின் லெட்சணம் தெரிந்துவிட்டது. 

இதை வெறும் மிடில் ஆர்டர் சிக்கல் என்று மட்டுமே பார்க்கமுடியாது. ஏனெனில் யுவராஜ் சிங்கை ஓரங்கட்டிய பிறகு மிடில் ஆர்டர் சிக்கல் இருந்தது அனைவருக்குமே தெரியும். நான்காம் வரிசை வீரருக்கான நீண்ட தேடுதல் படலம் நடந்தது. உலக கோப்பையை மனதில்வைத்து அணியை கட்டமைக்கும் முழு உரிமையையும் கேப்டன் கோலியும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பெற்றிருந்தனர். 

ஆனாலும் அவர்களால், 2 ஆண்டுகால தேடுதல் படலத்திற்கு பிறகும் சரியான மற்றும் தகுதியான 4ம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு, நல்ல வீரர்கள் இல்லை என்பது காரணமல்ல. அணியின் நலன் கருதி நடுநிலையோடு செயல்பட்டு சிறந்த வீரரை அடையாளம் கண்டு இவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை என்பதே உண்மை. 

ஏனெனில் ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் என எத்தனையோ சிறந்த வீரர்கள் இருந்தும்கூட அணி நிர்வாகமும் கேப்டனும் இவர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. கடைசியாக இந்திய அணியின் நான்காம் வீரர் இவர் தான் என்று கேப்டன் கோலியால் அங்கீகரிக்கப்பட்ட ராயுடுவும் உலக கோப்பை அணியில் கழட்டிவிடப்பட்டார். 

இவ்வாறு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, அணியை கட்டமைப்பதற்கு பதிலாக அந்தந்த நேரத்திற்கு தேவையானதை செய்துகொண்டே இருந்தது அணி நிர்வாகம். அதன் விளைவுதான் உலக கோப்பை தோல்வி. 

இது ஒருபுறமிருக்க, உலக கோப்பை தோல்விக்கு பின்னர், அணியில் இரண்டு கேங் இருப்பதும், அந்த கேங் பிரச்னை அணி தேர்வில் எதிரொலித்ததும் தெரியவந்தது. அணியின் சீனியர் வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவின் ஆலோசனையை பெறாமல் கேப்டன் கோலியும் ரவி சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை வேண்டுமென்றே ஓரங்கட்டிவிட்டு, தனது விசுவாசிகளான ராகுல், சாஹல் ஆகியோர் சரியாக ஆடாவிட்டாலும் கூட கேப்டன் கோலி அனைத்து போட்டிகளிலும் ஆடவைக்கிறார் என்ற கருத்து வெளிவந்தது. 

ஒரு கேப்டன், அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனது நோக்கத்திற்கு செயல்பட்டு விட்டு, அது எடுபடாமல் போனதற்கு பின்னர், தனது செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது எந்த வகையிலும் அணிக்கு பலனளிக்காது. 

கோலியின் இதுபோன்ற அணுகுமுறைகளால் அவரது கேப்டன்சி பறிபோகும் நிலை உருவாகியுள்ளது. அணியின் சிக்கல்களை கலைந்து வலுவான அணியை கட்டமைக்கும் பணியை ரோஹித்திடம் கொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து, அணியில் இருக்கும் சில சிக்கல்களை கலைந்து அவற்றிற்கெல்லாம் தீர்வு கண்டு வலுவான அணியை கட்டமைப்பதற்கு ரோஹித்தே சரியான நபர். எனவே ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு இதுவே சரியான தருணம் என்று கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 
 

click me!