டி20 உலக கோப்பையை இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் நடத்தலாம் என்று பிசிசிஐ உயர்மட்ட குழு ஆலோசித்து நகரங்களின் பட்டியலை ஐசிசிக்கு அனுப்பியுள்ளது.
கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவி பெரும் அச்சுறுத்தலாக திகழும் நிலையில், கொரோனா நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றி ஐபிஎல்லை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்திவருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளது. அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், எந்தெந்த நகரங்களில் நடத்தலாம் என்பது குறித்து முன்கூட்டியே ஐசிசிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அதற்காக பிசிசிஐ உயர்மட்ட குழு கலந்தாலோசித்து 9 நகரங்களின் பட்டியலை ஐசிசிக்கு அனுப்பியுள்ளது. அதன்படி, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, தர்மசாலா ஆகிய 9 நகரங்களின் நடத்தலாம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது பிசிசிஐ அனுப்பியிருக்கும் பட்டியல். இந்த நகரங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ செய்திருக்கும் ஏற்பாடுகளை பார்த்துவிட்டு இறுதி முடிவை ஐசிசி எடுக்கும்.