இந்திய அணியின் தனித்துவமே இதுதான்.. பேட்டிங் கோச் பெருமிதம்

By karthikeyan VFirst Published May 20, 2019, 3:51 PM IST
Highlights

உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் தனித்துவம் என்னவென்பதை பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பகிர்ந்துள்ளார். 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஆக்ரோஷமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் சிறப்பம்சமே பவுலிங் தான். முன்னெப்போதையும் விட சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். 

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி என பவுலிங் யூனிட் அபாரமாக உள்ளது. விஜய் சங்கர், ராகுல், தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா என மிடில் ஆர்டரும் வலுவாகவே உள்ளது. நான்காம் வரிசையில் விஜய் சங்கர் அல்லது ராகுலை இறக்கும் விதமாக இருவருமே அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். இருவரில் யார் இறங்கப்போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த முறை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்த மற்றும் எதிரணிகளின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடக்கூடிய ஆக்ரோஷமான அணியுடன் உலக கோப்பைக்கு செல்கிறது இந்திய அணி. அதனால் இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

இந்திய அணி அனைத்திலும் சமபலம் வாய்ந்த அணியாக உள்ள நிலையில், இந்திய அணி குறித்து பேசியுள்ள பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், ஒருநள் போட்டியை எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு ஒரு அளவீடு உள்ளது. அதன்படி சரியாக செயல்பட்டாலே போதும். ரிஸ்க் இல்லாமல் தொடர்ச்சியாக சீரான முறையில் சிறப்பாக ஆடிவருவது தான் இந்திய அணியின் தனித்துவமே. ஒருநாள் போட்டிகளை பொறுத்தமட்டில் பந்துகளை பெரும்பாலும் மிஸ் செய்யாமல் தொடர்ச்சியாக சிங்கிள்ஸ், டபுள்ஸ் என ஸ்டிரைக் ரொடேட் செய்வதே முக்கியம். அதை சரியாக செய்வதால்தான் பெரிய ரிஸ்க் இல்லாமல் இந்திய அணியால் சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற முடிகிறது என சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார். 
 

click me!