கிரிக்கெட்டில் எப்ப, என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது! சர்ப்ரைஸ் டிக்ளேர் குறித்து மௌனம் கலைத்த பாபர் அசாம்

By karthikeyan VFirst Published Dec 31, 2022, 12:47 PM IST
Highlights

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி ஒரு மணி நேரத்தில், 15 ஓவர்களில் முடிந்தால் 138 ரன்கள் என்ற இலக்கை அடியுங்கள் பார்க்கலாம் என்று துணிச்சலாக கடைசி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 2வது இன்னிங்ஸை பாபர் அசாம் டிக்ளேர் செய்தார். அதற்கான காரணம் குறித்து பாபர் அசாம் பேசியுள்ளார்.
 

பாகிஸ்தான் - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் மற்றும் அகா சல்மான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சதமடித்தனர். பாபர் அசாம் 161 ரன்களையும், தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த அகா சல்மான் 103 ரன்களையும் குவித்தனர். சர்ஃபராஸ் அகமது 86 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 438 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, கேன் வில்லியம்சனின் இரட்டை சதம் (200), டாம் லேதமின் அபார சதம்(113), டெவான் கான்வே(92), இஷ் சோதியின் (65) அரைசதங்களால் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 612 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் அபாரமாக ஆடி 96 ரன்களை குவித்து 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சர்ஃபராஸ் அகமது (53), சௌத் ஷகீல் (55) ஆகிய இருவரும் அரைசதம் அடிக்க, முகமது வாசிம் 43 ரன்கள் அடித்தார். 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் அடித்து 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ஆட்டத்தில் கடைசி ஒரு மணி நேரம் மட்டுமே மீதமிருந்த நிலையில், 137 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றிருந்த போதிலும், முடிந்தால் 15 ஓவரில் 138 ரன்கள் என்ற இலக்கை அடித்து பாருங்கள் என்ற துணிச்சலுடன் நியூசிலாந்துக்கு வாய்ப்பு கொடுத்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம். அந்த 15 ஓவரில் நியூசிலாந்தின் 10 விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தானுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கண்டிப்பாக இல்லாதபோதிலும், நியூசிலாந்து முடிந்தால் வெற்றி பெறட்டும் என்ற துணிச்சலுடன் போட்டியில் முடிவை பெறும் நோக்கில் டிக்ளேர் செய்தார் பாபர் அசாம்.

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே மற்றும் டாம் லேதம் அதிரடியாக பேட்டிங் ஆடி இலக்கை எட்டும் முனைப்பில் ஆடினர். ஆனால் 7.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 61 ரன்கள் அடித்த நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டதால் போட்டி டிராவானது.

பாபர் அசாம் டிக்ளேர் செய்தது துணிச்சலான முடிவு என்றும், அவரது முடிவு வியப்பளித்ததாகவும் கேன் வில்லியம்சன் கூறியிருந்தார். இந்நிலையில், தனது டிக்ளேர் முடிவு குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், டிக்ளேர் செய்ததும் சௌத் ஷகீல் அதிர்ச்சியடைந்தார். போட்டியில் முடிவு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் டிக்ளேர் செய்தோம். ஒரு சான்ஸ் எடுத்து பார்த்தோம். சௌத் ஷகீல் மற்றும் வாசிம் பார்ட்னர்ஷிப் எங்களுக்கு நம்பிக்கையளித்தது. கிரிக்கெட்டில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும். டிக்ளேர் முடிவு அனைவரையும் சர்ப்ரைஸ் செய்தது என்றார் பாபர் அசாம்.  

click me!