
ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக தோனி சிஎஸ்கே அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். தோனி தான் ஆடும் காலத்திலேயே சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டனை வளர்த்துவிட்டு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் கேப்டன்சியிலிருந்து விலகிக்கொண்டு ஜடேஜாவை கேப்டனாக்குமாறு பரிந்துரைத்தார்.
அதன்படி, ஐபிஎல் 15வது சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஜடேஜாவின் கேப்டன்சியில் சிஎஸ்கே அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஜடேஜாவின் கேப்டன்சியில் முதல் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது சிஎஸ்கே அணி.
சிஎஸ்கே அணி தோற்றது மட்டுமல்லாது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகியவற்றில் ஒரு விதத்தில் கூட ஜடேஜா சோபிக்கவில்லை. பொதுவாக மூன்றிலுமே பட்டைய கிளப்பும் ஜடேஜா, கேப்டன்சி நெருக்கடியிலும், தொடர் தோல்வியினால் எழுந்த அழுத்தத்திலும் மூழ்கினார். அது அவரது ஆட்டத்தை வெகுவாக பாதித்தது. 8 போட்டிகளில் வெறும் 112 ரன்கள் மட்டுமே அடித்துள்ள ஜடேஜா, 5 விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். வழக்கமாக ஃபீல்டிங்கில் மிரட்டும் ஜடேஜா, சில எளிய கேட்ச்களையும் தவறவிட்டார்.
அதுமட்டுமல்லாது களத்தில் தோனியே கேப்டனாக செயல்பட்டார். பெயரளவில் ஜடேஜா கேப்டனாக இருந்தாலும், பவுலிங் சுழற்சி, ஃபீல்டிங் செட்டப் ஆகியவற்றை தோனி செய்ய, ஜடேஜா பொம்மை மாதிரி நின்றுகொண்டிருந்தார். இது ஜடேஜாவை மேலும் பாதித்தது. களத்தில் தன்னால் முழு கேப்டனாக செயல்படமுடியாத அதேவேளையில், தோல்வி அழுத்தத்தை மட்டும் தாங்கிக்கொள்வதாக இருந்தது.
ஆனாலும் ஜடேஜாவிற்கு முட்டுக்கொடுக்கும் விதமாக, ஜடேஜா சிறந்த கேப்டன் என்றும், ஒரு நாள் கண்டிப்பாக இந்திய அணியின் கேப்டனாகவே ஆவார் என்றும் அம்பாதி ராயுடு கூறியிருந்தார்.
ஆனால் சிஎஸ்கே அணியின் கேப்டன்சி அழுத்தத்தையே தாங்கமுடியாமல், ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார் ஜடேஜா. அவர் இந்திய அணியின் கேப்டனாகவும், ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும் இருந்து அந்த அழுத்தத்தை சமாளித்து ஆடுவதெல்லாம் கனவிலும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத காரியம்.