IPL 2022: அகமதாபாத் அணி ஏலத்திற்கு முன் எடுக்கும் 3 வீரர்கள் இவங்கதான்! 2 மேட்ச் வின்னர்கள், ஒரு இளம் வீரர்

By karthikeyan VFirst Published Jan 18, 2022, 2:59 PM IST
Highlights

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய 3 வீரர்களையும் வாங்குகிறது.
 

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக இணைகின்றன. அதனால் இந்த சீசன் முதல் 10 அணிகள் ஐபிஎல்லில் ஆடவுள்ளன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தது.

கேஎல் ராகுல், டேவிட் வார்னர், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் ஆகிய பெரிய வீரர்கள் சிலர் அவர்கள் சார்ந்த அணிகளிலிருந்து வெளிவந்துள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகளும், ஏலத்திற்கு முன்பாக அதிகபட்சம் 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். 

அந்தவகையில், அகமதாபாத் அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கான் ஆகிய 2 மேட்ச் வின்னர்களுடன், 3வது வீரராக ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் வாங்குகிறது.

2015ம் ஆண்டிலிருந்து ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, ஐபிஎல்லில் 92 போட்டிகளில் ஆடி 1476 ரன்களை குவித்ததுடன், 42 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு, ஆட்டத்தையே திருப்பக்கூடிய மேட்ச் வின்னராக திகழ்ந்துவந்தார் ஹர்திக் பாண்டியா. ஆனால் கடந்த 2 சீசன்களாக அவரது ஃபிட்னெஸ் சரியில்லாததால் அவரால் முழு பங்களிப்பை அளிக்க முடியவில்லை. கடந்த சீசன் முழுவதுமாக அவர் பவுலிங்கே போடவில்லை. அதிகபட்சம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ளலாம் என்பதால் ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியால் தக்கவைக்கமுடியவில்லை. 

மும்பை இந்தியன்ஸ் அணியால் விடுவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்கிறது அகமதாபாத் அணி. அவரையே கேப்டனாகவும் நியமிக்கவுள்ளது.

சன்ரைசர்ஸ் அணியால் கழட்டிவிடப்பட்ட மிகப்பெரிய மேட்ச் வின்னரான ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கானையும் ரூ.15 கோடிக்கு எடுக்கும் அகமதாபாத் அணி, 3வது வீரராக ஷுப்மன் கில்லை ரூ.7 கோடிக்கு ஒப்பந்தம் செய்கிறது.

3வது வீரராக இஷான் கிஷனைத்தான் டார்கெட் செய்தது அகமதாபாத் அணி. ஆனால் ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தன்னை பெருந்தொகைக்கு எடுக்கும் என்ற நம்பிக்கையில், ஏலத்தில் பங்குபெற அவர் விரும்பியதால், அவரை அகமதாபாத் அணி எடுக்கவில்லை.
 

click me!