கம்பேக் குறித்து மௌனம் கலைத்த டிவில்லியர்ஸ்.. ரசிகர்கள் செம குஷி

By karthikeyan VFirst Published Mar 19, 2020, 2:01 PM IST
Highlights

2018ம் ஆண்டின் மத்தியில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான டிவில்லியர்ஸ், தனது கம்பேக் குறித்து பேசியுள்ளார்.
 

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஏபி டிவில்லியர்ஸ், உலக கோப்பைக்கு ஓராண்டுக்கு முன்பாக 2018ம் ஆண்டின் மத்தியில் திடீரென ஓய்வு அறிவித்தார். 

டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு அனைவருக்குமே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு அறிவித்ததாக தெரிவித்த டிவில்லியர்ஸ், ஐபிஎல் உட்பட பல்வேறு வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

அண்மையில் கூட பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக ஆடினார். இதற்கிடையில், உலக கோப்பையில் மரண அடி வாங்கி லீக் சுற்றுடன் வெளியேறிய தென்னாப்பிரிக்க அணி, அதன்பின்னர் இந்தியாவிற்கு வந்து இந்திய அணியிடம் தோல்விகளை சந்தித்து ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

இந்த ஆண்டின் இறுதியில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணி அதற்காக தீவிரமாக தயாராகிவருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும் விதமாக குயிண்டன் டி காக் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் தென்னாப்பிரிக்க அணி, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சிறப்பாக ஆடியது. 

ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கு மிகச்சிறந்த அணியுடன் செல்ல வேண்டும் என்பதில் தென்னாப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் உறுதியாக இருக்கிறார். எனவே அதற்காக டிவில்லியர்ஸை மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ள தயாராகவும் இருக்கிறார். இதுதொடர்பாக டிவில்லியர்ஸிடம் பேசியிருப்பதாகவும் அணி நிர்வாகம் அழைக்கும்போது வருவாரேயானால் அவர் கண்டிப்பாக அணியில் இருப்பார் என பவுச்சர் தெரிவித்திருந்தார். 

அதன்பின்னர் டிவில்லியர்ஸ் கம்பேக் குறித்த அப்டேட் இல்லாத நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்காக மீண்டும் ஆடவேண்டும் என்று நினைக்கும் வீரர்கள், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி, அணி நிர்வாகம் அழைக்குபோது கரெக்ட்டாக அணியில் இணைந்தால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று மார்க் பவுச்சர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தனது கம்பேக் குறித்து பேசியுள்ள டிவில்லியர்ஸ், என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போதைக்கு எனது முழு கவனமும் ஐபிஎல்லின் மீதுதான் இருக்கிறது. ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி ஆர்சிபி அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டும். அதன்பின்னர் பொறுமையாக இருந்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் நடப்பது சந்தேகமாகவுள்ளது. ஆனால் முதல்முறையாக ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் உள்ள ஆர்சிபி அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் டிவில்லியர்ஸ் பேசியிருப்பது மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
 

click me!