பாலில் கிடக்கும் “ஈ”யை தூக்கி போடுற மாதிரி இந்திய அணியிலிருந்து அவரை தூக்கி போட்டுட்டாங்க..!

By karthikeyan VFirst Published Jul 10, 2020, 5:27 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் ஒருவரை அசால்ட்டாக அணியிலிருந்து ஓரங்கட்டியது குறித்த வேதனையை ஆகாஷ் சோப்ரா பகிர்ந்துள்ளார். 
 

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் சமகாலத்தின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர்களாக திகழ்கின்றனர். இவர்களுக்கு நிகரான புகழ், பெருமையுடன் திகழ்வதற்கான திறமையும் தகுதியும் இருக்கும் வீரர் அஜிங்க்யா ரஹானே. ஆனால் அவர் ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு டெஸ்ட் அணியில் மட்டும் ஆடிவருகிறார். 

இந்திய கிரிக்கெட் வரலாற்றில், சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட தரமான பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர். பேட்டிங்கில் எந்த ஆர்டரிலும் இறங்கி, சூழலுக்கு ஏற்றவாறு தாக்குதல் மற்றும் தடுப்பு ஆகிய இரண்டுவிதமான ஆட்டத்தையும் ஆடக்கூடியவர் ரஹானே. 

ரோஹித் சர்மா, கோலி ஆகியோர் வெளிநாடுகளை விட இந்தியாவில் தான் அதிக சராசரியை வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவை விட வெளிநாடுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக சராசரியை வைத்திருப்பவர் ரஹானே. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ரோஹித், கோலி ஆகியோரை விட சிறப்பாக ஆடியிருப்பவர் ரஹானே. 

டெஸ்ட்டில் மட்டுமல்லாது, ஒருநாள் போட்டிகளிலும் ரஹானே நன்றாகத்தான் ஆடினார். இந்திய அணிக்காக 90 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2962 ரன்கள் அடித்துள்ளார். டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எந்த பேட்டிங் வரிசையிலும் இறங்கி சிறப்பாக ஆடுபவர் ரஹானே. நான்காம் வரிசையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரஹானே, திடீரென 2018ம் ஆண்டு ஒருநாள் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். உலக கோப்பைக்கு(2019) ஓராண்டு இருந்த நிலையில், திடீரென ரஹானேவை ஓரங்கட்டிவிட்டு, நான்காம் வரிசை வீரரை தேடும் பணியில் இறங்கியது இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும். சரியான நான்காம் வரிசை வீரரை 2019 உலக கோப்பைக்கு முன்பு தேர்வு செய்து அந்த இடத்தை நிரப்பாததால், உலக கோப்பையில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி அரையிறுதியில் தோற்று வெளியேறியது இந்திய அணி. 

ரஹானே அருமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவருக்கு அதன்பின்னர் ஒருநாள் அணியில் வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகியோர் மிடில் ஆர்டரை நிரப்பிவிட்டனர். அதனால் இனிமேல் ரஹானேவிற்கு ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவரும் ரஹானே, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவுள்ளார். 

இந்நிலையில், ரஹானே ஒருநாள் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, ரஹானே நான்காம் வரிசையில் நன்றாகத்தான் ஆடினார். நல்ல ஸ்டிரைக் ரேட்டுடன் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவந்தார் ரஹானே. ஆனாலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். அவரை ஒருநாள் அணியிலிருந்து நீக்குவதற்கு எந்தவிதமான காரணமுமே இல்லை. பாலில் இருக்கும் ஈயை தூக்கி போடுவது போல, திடீரென ஒருநாள் அணியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனால் ஏன் ரஹானே நீக்கப்பட்டார் என்று எனக்கும் சரியான காரணம் தெரியவில்லை. ரஹானேவை நீக்கியது என்னை பொறுத்தமட்டில் தவறான முடிவு. அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். 
 

click me!