#ICCWTC ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து பலப்பரீட்சை..! எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு.. ஆகாஷ் சோப்ரா ஆருடம்

By karthikeyan VFirst Published May 24, 2021, 8:25 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட் போட்டிகளுக்கு உலக கோப்பையை நடத்தும் ஐசிசி, முதல் முறையாக டெஸ்ட் போட்டிக்கான சாம்பியன்ஷிப் தொடரை நடத்துகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதி போட்டிக்கு முந்தைய போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதலிரண்டு இடங்களை பிடித்தன. இதையடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மேட்ச் வரும் ஜூன் 18-22ல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடக்கிறது.

ஃபைனலில் வெற்றி பெற்று முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் முனைப்பில் தான் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே உள்ளன.  வலுவான இரு அணிகள் இறுதி போட்டியில் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வெற்றி வாய்ப்பு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. அதற்காக இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடும் என்று நான் சொல்லவில்லை. டெஸ்ட் ரேங்கிங்கில் 2ம் இடத்தில் இருக்கும் வலுவான அணி நியூசிலாந்து. இறுதிப்போட்டி நடக்கும் சவுத்தாம்ப்டன் கண்டிஷனில் இந்திய அணியை நியூசிலாந்து கொஞ்சம் நன்றாக ஆடும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன் நியூசிலாந்து அணி, இங்கிலாந்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. அது அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கும். இந்தியனாக, நம் மனது இந்தியாதான் ஜெயிக்கும் என்று நினைக்கும். ஆனால் நியூசிலாந்தை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது. ஆஸ்திரேலியாவில் அந்த அணியை வீழ்த்திய இதே இந்திய அணியால் நியூசிலாந்து மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்த முடியவில்லை. அதே பிரச்னையைத்தான் இந்திய அணி சவுத்தாம்ப்டனிலும் எதிர்கொள்ளும் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
 

click me!