#SLvsIND இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட வீரர்..! இது பெரும் அநீதி என கொந்தளிக்கும் ஆகாஷ் சோப்ரா

By karthikeyan VFirst Published Jun 12, 2021, 5:49 PM IST
Highlights

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் ராகுல் டெவாட்டியாவை எடுக்காததை ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார்.
 

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூலை 13 முதல் 25 வரை இந்த தொடர் நடக்கவுள்ளது. இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய மெயின் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் ஆடவிருப்பதால், அடுத்தகட்ட இந்திய அணி இலங்கைக்கு செல்லவுள்ளது.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகிய முக்கியமான வீரர்கள் இங்கிலாந்து தொடரில் ஆடுவதால், இளம் வீரர்களுக்கு இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அணியின் சீனியர் வீரர் என்ற முறையில் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிய தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சேத்தன் சகாரியா ஆகிய வீரர்களுக்கு அணியில் கிடைத்துள்ளது. தவான் தலைமையில் 20 வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது. நெட் பவுலர்களாக இஷான் போரெல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 பேரும் எடுக்கப்பட்டனர்.

இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி:

ஷிகர் தவான்(கேப்டன்), புவனேஷ்வர் குமார்(துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், கிருஷ்ணப்பா கௌதம், க்ருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, சேத்தன் சகாரியா.

இந்திய அணியில் ஏற்கனவே எடுக்கப்பட்டு ஆடும் லெவனில் வாய்ப்பே வழங்கப்படாத ராகுல் டெவாட்டியாவை இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் புறக்கணித்திருப்பதை ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ராகுல் டெவாட்டியா எங்கே? கடந்த முறை இந்திய அணியில் எடுக்கப்பட்டபோது, ஆடும் லெவனில் டெவாட்டியாவிற்கு வாய்ப்பே வழங்கப்படவேயில்லை. ஆட வாய்ப்பே வழங்காமல் அணியில் புறக்கணிக்கப்படுவது பெரும் அநீதி என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!