Latest Videos

டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவிப்பு!

By Rsiva kumarFirst Published Jun 30, 2024, 8:58 PM IST
Highlights

டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியனான இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவிப்பதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியானது டிராபியை வென்று புதிய சரித்திரம் படைத்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் முறையாக டிராபி வென்று கொடுத்தார். இதன் மூலமாக இந்திய அணி 2ஆவது முறையாக டிராபி வென்று அதிக முறை டிராபி வென்ற அணிகளின் பட்டியலில் 3ஆவதாக இணைந்தது.

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா 2 முறை டிராபியை வென்றுள்ளன. கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் டி20 உலகக் கோப்பையிலேயே எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை வென்று சரித்திரம் படைத்தது. அதன்பிறகு ஒரு முறை இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய அணி தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.

இந்த நிலையில் தான் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக இந்திய அணி டிராபியை வென்று சரித்திரம் படைத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி, அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

கடைசி ஓவரில் டேவிட் மில்லரது கேட்சை சூர்யகுமார் யாதவ் பிடிக்கவில்லை என்றால் பந்து சிக்ஸருக்கு சென்றிருக்கும். அதன் பிறகு 5 பந்துகளில் தென் ஆப்பிரிக்கா 10 ரன்கள் எடுத்து எளிய வெற்றியை பெற்றிருக்கும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே சூர்யகுமார் யாதவின் அந்த கேட்ச் தான். இதற்காக அவருக்கு சிறந்த பீல்டருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. 2ஆவது முறையாக டிராபியை வென்ற இந்திய அணிக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் டிராபி வென்று உலக சாம்பியனான இந்திய அணிக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும், இந்திய அணியானது சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை உழியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். டிராபி வென்ற இந்திய அணிக்கு மட்டும் ரூ.125 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், 2ஆவது இடம் பிடித்து தென் ஆப்பிரிக்காவிற்கு எத்தனை கோடி பரிசுத் தொகை என்று அறிவிக்கப்படவில்லை. அதே போன்று 3ஆவது மற்றும் 4ஆவது இடம் பிடித்த அணிகளுக்கும் எவ்வளவு தொகை என்பதும் குறித்தும் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இங்கிலாந்து அணிக்கு ஐசிசி ரூ.13 கோடி மட்டுமே பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது. 2ஆவது இடம் பிடித்த பாகிஸ்தானுக்கு ரூ.6.5 கோடி, அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தலா ரூ.3.25 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

I am pleased to announce prize money of INR 125 Crores for Team India for winning the ICC Men’s T20 World Cup 2024. The team has showcased exceptional talent, determination, and sportsmanship throughout the tournament. Congratulations to all the players, coaches, and support… pic.twitter.com/KINRLSexsD

— Jay Shah (@JayShah)

 

click me!