நடு வழியில் குடிகொண்ட நாயகியை சரணடந்தால் அல்லல் அகலும்!

By Dinesh TGFirst Published Sep 17, 2022, 5:25 PM IST
Highlights

ஈரோடு மாவட்டம் குமாரபாளையம், சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்ட அங்காள பரமேஸ்வரிக்கு சுவாரசியமான வரலாறு உண்டு.
 

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால், விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூரில் உள்ள அங்காளியால் (அங்காள பரமேஸ்வரி) மைசூரை சேர்ந்த 4 பக்தர்கள் ஆகர்ஷிக்கப்பட்டனர். அங்காளிக்கு தங்கள் ஊரிலேயே கோயில் அமைக்க ஆசைப்பட்டனர். அதற்காக சத்தி பீடமாக விளங்கும் மேல்மலையனூர் அங்காளியின் புற்றில் இருந்து மண் எடுத்து வந்து, சிலை செய்து கோயிலை அமைக்க முடிவுசெய்தார்கள். அதற்காக மேல்மலையனூர் சென்று, ஒரு சிற்பியைக் கொண்டு அங்காளி சிலையை வடித்து, அதற்கு ஒரு மண்டலம் பூஜை செய்து, புற்று மண் எடுத்துக்கொண்டு மைசூருக்குப் புறப்பட்டனர்.

கொங்கு நாட்டுக்குள் நுழைந்து அதன் வழியாக மைசூர் செல்ல 4 பக்தர்களும் திட்டமிட்டிருந்தார்கள். செல்லும் வழியில் பவானி ஆற்றங்கரையில் குமாரபாளையம் என்ற பகுதியில் நீராட எண்ணி அம்மனின் சிலையைக் கீழே வைத்துவிட்டு, நீராடி முடித்தார்கள். அதன் பிறகு, பயணத்தைத் தொடர்வதற்காக கீழே வைக்கப்பட்டிருந்த அங்காளியின் சிலையை தூக்க முயற்சித்தபோது, சிலையை அசைக்கக்கூட முடியவில்லை. 

அந்த ஊரில் இருந்த மக்களும் சேர்ந்து முயற்சி செய்தும் பலனில்லை திடீரென கூட்டத்தில் இருந்த பெண், அருள் வந்து பேசத் தொடங்கினாள் ” கலிகாலத்தில் உலகம் எங்கும் வியாபித்து அருள் புரிந்து அறம் வளர்த்து, நல்லதற்கு நலமும் தீயதற்குத் தேய்வும் அளிக்க ஆங்காங்கே குடிகொள்ளப் போகிறேன், அதற்காக இந்த இடத்தை, நானே தேர்ந்தெடுத்துக் குடிகொண்டேன்” எனக் கூறி மயங்கி விழுந்தாள்.

Avani Pournami 2022 : ஆவணி பௌர்ணமியில் அப்படி என்ன விசேஷம்

அம்மனை மைசூருக்கு அழைத்துச் செல்ல விரும்பிய நால்வரும் கண்ணீருடன் “அம்மா! எங்கள் ஊருக்கு செல்ல அழைத்து வந்தோம். நீயோ நடுவழியில் பவானி நதிக்கரையில் குடிகொண்டு விட்டாயே” எனக்கூறி, அம்மனின் எண்ணப்படியே, அங்கேயே ஓர் சிறிய கோயிலைக் கட்டினார்கள். இந்தத் திருவிளையாடலுடன் சத்தியமங்கலத்தில் ஆட்சி புரிய வந்தவள்தான் அங்காள பரமேஸ்வரி. சாத்விக குணமும் பார்வையும் கொண்டவளாக நான்கு கரங்களில் சூலம், டமருகம், கத்தி, கபாலம் ஆகியவற்றைக் கொண்டு இடக் காலை மடக்கி, வலக் காலைத்தொங்க விட்டு அதனடியில் பிரம்ம கபாலமுமாக காட்சி தருகிறாள். சக்தியானவள்
குடிகொண்டதால் இந்த இடம் சத்தியமங்கலமென அழைக்கப்பட்டது.

கருங்கல்லில் கடவுள் சிலை .. காரணம் என்ன தெரியுமா?

கோயிலின் முன்புறத்தில் 94 வகை சக்திகளோடு சக்தியாக ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்து நிற்கிறது. அடுத்து வசந்த மண்டபத்தின் முன்னால் கருப்பராயரும் பேச்சியம்மனும் தீமையை ஓட்டும் சம்ஹார ரூபர்களாக விஸ்வரூபமெடுத்து அமர்ந்திருக்கின்றனர் வசந்த மண்டபத்தில் அலங்காரத் தூண்களின் அணிவகுப்பின் முடிவில் கன்னி மூலை கணபதி, அதைத் தொடர்ந்து செந்திலாண்டவர் இருந்து அருளுகின்றனர். மகா மண்டபத்தின் தூண்களில் அஷ்டலட்சுமி ரூபங்கள் உள்ளன. 

கருவறையின் மேல் இரண்டு நிலை விமானத்தைக் கொண்டு சாந்த சொரூபியாகத் திருக்காட்சி நல்கும் அங்காள பரமேஸ்வரியின் அழகுத் திருக்கோலத்தைப் பார்த்தவுடன் நம் அனைவரின் அல்லல் நீங்குவது உறுதி.

click me!