சிவபெருமானின் சொந்த ஊர் எது தெரியுமா?

By Dinesh TGFirst Published Oct 14, 2022, 11:52 PM IST
Highlights

சிவபெருமான் தமிழகத்தின் மாமன்னராக இருந்திருக்கலாம் என்றும், அவரை வட இந்திய கடவுள் என்றும் ஒரு சிலர் கூறு வருகின்றனர். ஆனால் சிவனை வணங்குபவர்கள் 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்று  தமிழகத்தை குறிப்பிட்டு  அதிலும் மிக முக்கியமாக தென்னகத்தைச் சார்ந்தவராகத் தான் சிவபெருமான் இருப்பார் என்று உறுதியாக நம்புகின்றனர். 
 

சிவபெருமான் பிறந்த ஊர் ராமேஸ்வரம் பக்கத்தில் உள்ளது என்றும் அதற்கான ஆதாரங்கள் உள்ளது அது இவையனைத்தையும் உறுதிப்படுத்துகிறது என்றும் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் எது உண்மை.. எது பொய்.. என்று தெரியாவிட்டாலும், உத்தரகோசமங்கையில் எண்ணற்ற மர்மங்கள் நிறைந்திருக்கிறது. அவற்றில் உலகில் பழமையான சிவலிங்கம், மரகத நடராஜர் மற்றும் ஏகாபாத சிலைகள் என ஏராளாமானவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

சிவபெருமானின் தலங்களுள் முக்கியமான முதன்மையான ஸ்தலம் உத்திரகோசமங்கை என்றும்,  உலகில் தோன்றிய முதல் சிவன் கோயில் என்னும் பெருமை மிக்க கோயிலாகவும் இது உள்ளது. எப்படி சிவபெருமானின் அடிமுடியை காண முடியாதோ அதேபோன்று தான் இந்த கோவிலின் சிறப்பையும், பெருமையையும் சொல்ல சொல்ல தீராது. திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்பது போல,  உத்தரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

நடப்பதெல்லாம் நன்மைக்கே!! புத்தரே புகழ்ந்த பூர்ணாவின் கதை!!

இந்த தலத்தின் பெருமை குறித்து திருவாசகத்தில் 38 இடங்களில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு மொத்தம் 1087 தலம் இருந்தாலும் இதுதான் நடராஜருக்கு சொந்த ஊர் என்கிறார் மாணிக்கவாசகர். இந்த ஆலயத்தில் மட்டும் மாணிக்கவாசகருக்கு தனி சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வேதவியாசர், மிருகண்டு முனிவர், அருணகிரி நாதர், பராசரர் போன்ற மாமுனிகள் இத்தலத்தில் உள்ள  சிவபெருமானிடம்  அருள் பெற்றுள்ளனர்.

இந்த தலம் ஆதி காலத்தில் உருவான முதல் கோயில் என்பதால், ஆதி சிதம்பரம் கோவி ல் என்றும் அழைக்கப்படுகிறது. நடராஜர் இங்கு ஆடிய பின்னர் தான் சிதம்பரத்தில் ஆடினார் என்றும் கூறப்படுகிறது. சிவபெருமான்  உமையவளுக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடமாகவும் இது இருக்கிறது. உத்தரம் என்பது உபதேசம், கோசம் என்பது ரகசியம், மங்கை என்பது பார்வதி தேவி. இவை மூன்றையும் இணைந்து தான் உத்தரகோச மங்கை என்ற பெயரை பெற்றுள்ளது. 

அதிர்ஷ்டம் போகலாம்.. அஷ்டலஷ்மி போகலாமா?

இந்த ஆலயத்தில் இறைவன் மங்கள நாதரும், இறைவி மங்கள நாயகியும் தனித்தனியான சன்னதியில் காட்சி தருகிறார்கள். விமானமும், கோபுரமும் கூட தனித்தனியாக உள்ளன. இலந்தை மரத்தடியில் சுயம்புவாக மூலவர் உருவானார் என்றும், இந்த சுயம்பு லிங்கம் 3000 வருடங்களுக்கு முந்தையது என்றும் கூறப்படுகிறது. இங்கு ஐந்தரை அடி உயரமுள்ள நடராசர் திருமேனி மரகதத்தால் ஆனது என்றும், உலகிலேயே பெரிய மரகதக் கல் இதுவாகத்தான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.  இயன்ற போது உத்தரகோசமங்கை சென்று மங்களேஸ்வரரை தரிசித்து விட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையிலும் மங்களம் உண்டாகும்.

click me!