சித்ரா பௌர்ணமிக்கு மட்டுமே இங்கு செல்ல முடியும்.. கண்ணகி கோயில் வரலாறு தெரியுமா?

By Asianet TamilFirst Published Apr 22, 2024, 4:34 PM IST
Highlights

கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து 14 கி.மீ தொலைவியிலும், தேனி மாவட்டம் பளியன்குடி கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில்

கேரள மாநிலம் இடுக்கியில் இருந்து 14 கி.மீ தொலைவியிலும், தேனி மாவட்டம் பளியன்குடி கிராமத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். இந்த கோயில் தமிழக எல்லையில் இருந்தாலும் கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. கேரள மாநிலம் குமுளியில் இருந்து பாதுகாக்கப்பட்ட கேரள வனப்பாதை வழியாக ஜீப் செல்லும் வண்டி பாதை உள்ளது. இந்த பாதை வழியாக இந்த கோயிலுக்கு செல்லலாம். இல்லை எனில் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக 6.6 கி.மீ தூரத்திற்கு நடைப்பாதை வழியாகவும் இந்த கோயிலுக்கு செல்லலாம்.

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று மங்கல தேவி கண்ணகி விழா, பூமாரி விழா எனும் முப்பெரும் விழா நடைபெறும். வெகுவிமரிசையாக நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். எனினும் இந்த கோயில் அமைந்துள்ள பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் தமிழக – கேரள மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. 

சித்ரா பௌர்ணமி 2024 : திருவண்ணாமலையில் கிரிவலம் எப்போது சொல்லலாம்..? உகந்த நேரம் என்ன..?

கண்ணகி கோயில் வரலாறு :

கோவல் கொலை செய்யப்பட்ட துக்கத்தில் மதுரையை எரித்த கண்ணகி, வைகை கரையோரமாக இங்கு வந்ததாக சிலப்பதிகாரத்தில் குறிப்புகள் உள்ளன. இந்த இடத்தில் கோவலன் கண்ணகிக்கு மங்கள்நாண் கட்டி, புஷ்பகரதத்தில் விண்ணுக்கு அழைத்து சென்றதாக ஐதீகம். இந்த சிறப்பை உணர்ந்த சேரன் செங்குட்டுவன், இமயமலையில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு இந்த இடத்தில் கோயில் கட்டினார். இந்த கோயில் தான் மங்கலதேவி கண்ணகி கோயில் என்று அழைக்கப்படுகிறது. கண்ணகியின் பழங்கால சிற்பங்களும் இங்கு உள்ளன. குலசேகர பாண்டியன், ராஜராஜ சோழன் இந்த கோயிலை புனரமைத்தனர்.

1905-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வந்த இந்த கோயில் முறையான சாலை வசதி இல்லாததால் பராமரிக்க முடியாமல் கைவிடப்பட்டது. 1965 வரை இந்த கோயிலை அனைவரும் மங்கல தேவி கோயில் என்ற அனைவரும் கருதினர்.

ஆனால் அதே ஆண்டு பேராசிரியர் கோவிந்தராசனார் என்பவர் தான் சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோயில் இது என்று ஆய்வு செய்து கண்டுபிடித்தார். பின்னர் தான் மங்கல தேவி கோயில் கண்ணகி கோயில் என்று 1971-ம் ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. 

Chitra Pournami 2024: சித்ரா பௌர்ணமி 2024 எப்போது? அதன் சிறப்பு, முக்கியத்துவம் என்ன?

எனினும் அதன்பின் தமிழகத்தில் அமைந்த பல அரசாங்கங்கள் பல முயற்சிகளை முன்னெடுத்தாலும் தமிழ்நாட்டின் எல்லையில் கண்ணகி கோயிலுக்கான பாதை இன்று வரை அமைக்கப்படவில்லை. கோயில் அமைந்துள்ள இடம் தமிழ்நாட்டிற்கு சொந்தம் என்றாலும், கோயிலுக்கான பாதை கேரளாவுக்கு சொந்தம். மேலும் கோயிலை பராமரிக்கும் பணி கேரள தொல்லியல் துறைக்கு சொந்தம். இதனால் தமிழக பக்தர்கள் அங்கு செல்வதில் சில சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அதாவது சித்ரா பௌர்ணமி தினத்தில் முப்பெரும் நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் கண்ணகி கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 

click me!