சிவனாக ரங்கசாமி, முருகனாக நமச்சிவாயம்; புதுவையில் நன்றிக்கடன் செலுத்திய ஊழியர்கள்

By Velmurugan sFirst Published Jan 21, 2023, 5:15 PM IST
Highlights

புதுச்சேரி மாநிலத்தில் ரொட்டி பால் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முதல்வர் ரங்கசாமியை சிவனாகவும், அமைச்சர் நமச்சிவாயத்தை முருகனாகவும் சித்தரித்து அவர்கள் புகைப்படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபாடு நடத்தினர். 

புதுச்சேரி அரசு கல்வி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச ரொட்டி பால் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

புதுவையில் தனி நபராக சாலையை சீரமைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள்

இவர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் குறைந்தபட்ச ஊதியமாக இவர்களுக்கு பத்தாயிரத்தை வழங்கி உத்தரவு வெளியிட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கேட்ட வரத்தை கொடுத்ததற்காக சிவபெருமானாக முதலமைச்சர் ரங்கசாமியையும்  முருகனாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவத்தையும் சித்தரித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அதேபோன்று ரொட்டி பால் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய சிவபெருமானும், முருகனும் கருணை காட்ட வேண்டும். தங்களுக்கு அருள் புரிய வேண்டும் என வலியுறுத்தி சிவனாக சித்தரிக்கப்பட்ட ரங்கசாமி புகைப்படத்தையும் முருகனாக சித்தரிக்கப்பட்ட நமச்சிவத்தின் புகைப்படத்தையும் மினி லாரியில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேளதாளத்துடன் சுதேசி பஞ்சாலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் அண்ணா சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டமன்றத்தை சென்றடைந்தது. 

வளர்ப்பு நாயை நாய் என்று அழைத்த முதியவர் குத்தி கொலை

சட்டமன்றம் முன்பாக சிவபெருமானையும், முருகனையும் அவர்கள் வழிபட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அருள் புரிய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள். தற்போது புதுச்சேரியில் ரொட்டி பால் ஊழியர்கள் நடத்திய இந்த போராட்டம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

click me!