
விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை.
ஆனால், தமிழகத்தில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். அரக்கோணம், விழுப்புர பழைய பேருந்து நிலையங்களில் விநாயகர் சிலைகளை வைத்து இந்து முன்னணி வழிபாடு செய்தது. திமுக ஆட்சியின் தடையை உடைத்து பொது இடத்தில் இந்து முன்னணி சார்பாக எட்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தியாகராய நகர் மதுரை வீரன் கோவில் அருகே நடைபெற்றது. திண்டுக்கல் பாறைப்பட்டியில் போலீஸ் தடையை மீறி இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோபிசெட்டிபாளையம் விநாயகரை நீர்நிலையில் கரைக்க எடுத்துச் சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு, நீதிமன்ற தடையை மீறி சென்னையில் ஆங்காங்கே இந்து முன்னணியினர் விநாயகர் சிலைகளை வைத்து வருகின்றனர்.