டி.ஆர். பாலு கட்சி பதவி பறிப்பு ஏன்..? அன்பில் மகேஷுக்காக கே.என். நேருவுக்கு பதவி உயர்வு..? திமுகவில் திகுதிகு காட்சிகள்!

By Asianet TamilFirst Published Jan 27, 2020, 9:33 AM IST
Highlights

இன்னொரு திருப்பமாக அன்பில் மகேஷ் வகித்துவரும் இளைஞரணி இணைச் செயலாளர் பதவி டி.ஆர். பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கப்படும் என்றும் கட்சியில் பேசப்படுகின்றன. இதன்காரணமாகவே முதன்மை செயலாளர் பதவியை கே.என். நேருவுக்கு டி.ஆர். பாலு விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கே.என். நேருவைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களாக உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான பதவிகளை வழங்கிவிட்டு, அங்கே புதிய மாவட்ட செயலாளார்களாக உதயநிதிக்கு தோதான இளைஞர்கள், மாவட்ட செயலாளார்களின் வாரிசுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.  

திருச்சி மாவட்ட செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நியமிக்கவே கே.என். நேருவுக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டிருப்பதாக திமுகவில் பேச்சு எழுந்துள்ளது.
இளைஞரணி செயலாளராக இருந்த மு.க. ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க 2008-ல் கருணாநிதி முடிவு செய்தார். அதற்காக பொருளாளர் பதவியை வகித்துவந்த ஆற்காடு வீராசாமி, மு.க. ஸ்டாலினுக்காக விட்டுக்கொடுத்தார். அந்தப் பதவியில் இருந்த ஆற்காடு வீராசாமிக்கு தலைமை நிலையை முதன்மை செயலாளர் என்ற புதிய பதவியை உருவாக்கி கருணாநிதி கொடுத்தார். தீவிர அரசியலிலிருந்து வீராசாமி ஒதுங்கிய பிறகு துணைப் பொதுச்செயலாளராக இருந்த துரைமுருகன் அந்தப் பதவிக்கு வந்தார்.


2018-ம் ஆண்டில் திமுக தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டபோது, அவர் வகித்துவந்த பொருளாளர் பதவி துரைமுருகனுக்கு வழங்கப்பட்டது. துரைமுருகன் வகித்துவந்த முதன்மை செயலாளர் பதவி டி.ஆர். பாலுவுக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவிதான் அவரிடமிருந்து பறிக்கப்பட்டு தற்போது கே.என். நேருவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை டி.ஆர். பாலு விட்டுக் கொடுத்ததிலும் கே.என். நேருவுக்கு வழங்கப்பட்டதிலும் பல கணக்குகள் கட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதாக திமுகவில் பேசப்படுகிறது.


திருச்சியில் 1993-ம் ஆண்டில் மாவட்ட செயலாளராக இருந்த செல்வராஜ், மதிமுகவுக்கு சென்ற பிறகு கே.என். நேரு அந்தப் பொறுப்புக்கு வந்தார். திருச்சி திமுக என்றால் அன்பில் தர்மலிங்கம் மற்றும் அவருடைய குடும்பம் என்ற நிலை இருந்தபோதும் அன்பில் தர்மலிங்கம், அவருடைய  மகன் பொய்யாமொழியைத் தாண்டி கே.என். நேருவை கருணாநிதி வளர்த்துவிட்டார். அதன்பின் திருச்சி திமுக என்றால், கே.என். நேரு என்றானது. பொய்யாமொழி மறைவுக்கு பிறகு அவருடைய தம்பி அன்பில் பெரியசாமி அரசியலுக்கு வந்தபோதும், அவர் தன்னை தீவிர கே.என். நேருவின் ஆதரவாளராகவே காட்டிக்கொண்டார்.
அன்பில் பொய்யாமொழியின் மகன் அன்பில் மகேஷ் ஸ்டாலின் குடும்பத்துக்கும் உதயநிதிக்கும் ஆரம்பம் கால முதலே நெருக்கமாக இருந்துவருகிறார். அன்பில் மகேஷ் மாநில இளைஞரணி இணை செயலாளராக இருந்தாலும், திருச்சி மாவட்ட திமுக மீது அவருக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட அன்பில் மகேஷ் விரும்பினார். ஆனால், அந்தத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு விரும்பி கேட்டுக்கொண்டதால் திமுக விட்டுக்கொடுத்தது. தனது சொந்த ஊரான லால்குடி, திருச்சி கிழக்கு தொகுதிகளைத் தாண்டி திருவெறும்பூரில் அன்பில் மகேஷை ஸ்டாலின் நிறுத்தினார். அன்பில் மகேஷும் வெற்றி பெற்றார். அப்போதே திருச்சி திமுகவுக்குள் அன்பில் மகேஷை கொண்டு வர ஸ்டாலின் விரும்புவது வெளிப்படுவதாகப் பேச்சு எழுந்தது.

 
அதேவேளையில் உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு பல மாவட்டங்களில் இளைஞர்களைக் கொண்டுவரவும், உதயநிதிக்கு தோதான ஆட்களைக் கொண்டு வரும் திட்டமும் கட்சிக்குள் முன்வைக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக திமுக  தலைமை அன்பில் மகேஷை திருச்சி மாவட்ட திமுகவுக்குள் கொண்டு வர விருப்பம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கே.என். நேருவுக்கு அது தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பதால், திருச்சியில் உள்ளாட்சித் தேர்தலில் அதிக ஒன்றியங்களை வென்று கொடுத்ததற்குப் பரிசு என கே.என். நேருவுக்கு பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாவட்ட செயலாளார் பதவியிலிருந்து விடுவிக்கப்பட இருக்கிறார். இதன்பிறகு கே.என். நேரு வகித்துவந்த தெற்கு மாவட்ட செயலாளார் பதவி அன்பில் மகேஷுக்கு வழங்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதில் இன்னொரு திருப்பமாக அன்பில் மகேஷ் வகித்துவரும் இளைஞரணி இணைச் செயலாளர் பதவி டி.ஆர். பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி. ராஜாவுக்கு வழங்கப்படும் என்றும் கட்சியில் பேசப்படுகின்றன. இதன்காரணமாகவே முதன்மை செயலாளர் பதவியை கே.என். நேருவுக்கு டி.ஆர். பாலு விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. கே.என். நேருவைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களாக உள்ள மூத்த நிர்வாகிகளுக்கு மாநில அளவிலான பதவிகளை வழங்கிவிட்டு, அங்கே புதிய மாவட்ட செயலாளார்களாக உதயநிதிக்கு தோதான இளைஞர்கள், மாவட்ட செயலாளார்களின் வாரிசுகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகின்றன.  

click me!