நாம் என்ன திமுகவின் வியாபாரிகள் அணியா? வணிகர் சங்க பேரமைப்பில் போர்க்குரல்..!

By Selva KathirFirst Published Jun 3, 2021, 11:47 AM IST
Highlights

 ஒரு சில விஷயங்களில் விக்கிரமராஜா திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவரது மகன் பிரபாகர் ராஜா திமுகவில் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தது தான்.

வெள்ளையனின் வணிகர் சங்கங்களின் பேரவை அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் உருவானது தான் விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு என்பது தான் தற்போது நினைவில் கொள்ள வேண்டியது.

தமிழகத்தில் ஒரே ஒர வணிகர் சங்கமாக வெள்ளையனின் வணிகர் சங்க பேரவை இருந்தது. ஆனால் அதனை உடைத்து விக்ரமராஜா வணிகர் சங்க பேரமைப்பை உருவாக்கினார். வெள்ளையன் முழுக்க முழுக்க அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் என்கிற புகார் அப்போது இருந்தது. திமுக ஆட்சியில் அதிமுக விற்கு அனுசரனையாக வெள்ளையன் செயல்பட்டதால் பல்வேறு இடங்களில் வணிகர்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டன. இதனை பயன்படுத்திக் கொண்டு பேரவையை உடைத்து பேரமைப்பை உருவாக்கினார் விக்கிரமராஜா. வணிகர் சங்க பேரமைப்பு உருவான பிறகு வணிகர் சங்க பேரவை பழைய செல்வாக்கை இழந்தது.

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் செல்வாக்குள்ள நபராக மாறினார். இதற்கிடையே வணிகர் சங்க பேரவையை உடைத்ததில் திமுகவிற்கு பங்கு இருந்ததாக அப்போது வெள்ளையன் குற்றஞ்சாட்டினார். ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விக்கிரமராஜா பெரிய அளவில் திமுக ஆதரவை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார். ஆனால் ஒரு சில விஷயங்களில் விக்கிரமராஜா திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் அவரது மகன் பிரபாகர் ராஜா திமுகவில் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தது தான்.

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகர் ராஜாவிற்கு திமுக தலைமை சீட் கொடுத்தது. வணிகர் சங்க பேரமைப்பு தலைவரான விக்கிரமராஜாவின் மகன் என்பதால் அந்த தொகுதி முழுவதும் வியாபாரிகள் அவருக்காக பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். பிரபாகர் ராஜாவும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதில் குறிப்பிட வேண்டிய அம்சம் தமிழகத்தில் தற்போதுள்ள எம்எல்ஏக்களில் மிகவும் இளம் வயது பிரபாகர் ராஜாவுக்குத்தான். இவ்வளவு சிறிய வயதில் அவர் எம்எல்ஏ ஆனதற்கு காரணமாக அவரது தந்தை விக்கிரமராஜாவிற்கு திமுகவுடன் இருக்கும் நெருங்கிய தொடர்பு தான் என்கிற பேச்சுகளும் எழுந்தன.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதற்கு வணிகர் சங்க பேரமைப்பு முழு ஆதரவு தெரிவித்தது. இது வியாபாரிகளை மிகவும் டென்சன் ஆக்கியது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி அரசு கடைசியாக ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை விதித்த போது அதற்கு வணிகர் சங்க பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலான பிறகு கடைகளை திறந்திருந்த வணிகர்களுக்கு ஏதேதோ காரணங்களை கூறி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ரூபாய் 5ஆயிரம் முதல் ரூ.50ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது. சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் வணிகர் சங்க பேரமைப்பு குரல் கொடுக்கவில்லை.

மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா கடைகளை அடைத்து வியாபாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்றார். சரி, அந்த கடைக்காரர்களுக்கு ஏதேனும்ட நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்பட்டதா என்றால் இல்லை? கடந்த அதிமுக ஆட்சியின் போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வணிகர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகை வேண்டும், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கம் குரல் கொடுத்தது.

ஆனால் தற்போது அதே வணிகர் சங்க பேரமைப்பு அமைதி காக்கிறது. மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலினும் வலியுறுத்தினார். அதனை எல்லாம் சுட்டிக்காட்டி வணிகர்களுக்கு உதவ வணிகர் சங்க பேரமைப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக விக்கிரமராஜா மகன் பிரபாகர் ராஜா எம்எல்ஏ ஆன நிலையில் கோயம்பேடு சந்தையில் ஆய்வு செய்து அங்கு விதிகளை மீறியதாக சில கடைகளுக்கு சீல் வைத்தது தான் மிச்சம் என்று கூறி கொதிக்கிறார்கள் வியாபாரிகள். நாம் என்ன வணிகர் சங்கபேரமைப்பா? இல்லை திமுகவின் வியாபாரிகள் அணியா? என்றும் சில நிர்வாகிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

click me!