warning to Eps: சின்னம்மா கண்ணசைத்தால் உன் வண்டி எந்த பக்கமும் போகாது.. எடப்பாடியை எச்சரித்த தேனி கர்ணன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 7, 2021, 6:02 PM IST
Highlights

ஏன்..? நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு சவால் விடுகிறேன், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள், அதில் சின்னம்மா நிற்கட்டும், ஓபிஎஸ் இபிஎஸ் நீங்களும்  நில்லுங்கள், தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம், அதற்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா? 

சசிகலா கண்ணசைத்தால் உனது வாகனம் எந்த பக்கம் போகாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா ஆதரவாளர்களில் ஒருவரான தேனி கர்ணன் எச்சரித்துள்ளார். எடப்பாடியின் நடவடிக்கைகளால் அதிமுக தொண்டர்கள் கடும் கோபத்தில் இர்ப்பதாகவும், அதனால்தான் அவரது வாகனத்தின் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அதிமுக கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். அதேபோல் அமமுக தொண்டர்களும் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். அப்போது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மரியாதை செலுத்த வந்தனர். அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஜெயலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினர் அவரது காரை மறித்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கிருந்த அதிமுக- அமமுக தொண்டர்கள்  இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனிடைய சில மர்ம நபர்கள் எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசினர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

பின்னர் போலீசாரின் பாதுகாப்புடன் எடப்பாடி பழனிச்சாமியின் கார் பத்திரமாக அங்கிருந்து வெளியேறியது. எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் வைரலானது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனை அடுத்து சென்னை மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த மாறன் என்பவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.  அதில் அமமுக போதுச் செயலாளர் டிடிவி தினகரம் தூண்டுதலின் பேரில் எடப்பாடி பழனிச்சாமியின் கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கூறினார். அந்த தாக்குதலில் தான் உட்பட அதிமுக தொண்டர்கள் காயமடைந்ததாகவும்  அவர் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாசதூக்கம் போலீசார்,  எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய வழக்கில் அமமுகவைச் சேர்ந்த 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு  செய்தனர். இது டிடிவி தரப்பிற்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் அதிமுகவின் நடந்து முடிந்த உட்கட்சி தேர்தல் குறித்தும் ச சிகலா ஆதரவாளர்களில் ஒருவரான தேனி கர்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார் அதில், அவர் கூறியிருப்பதாவது, 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டி போட வந்தவர்கள் அடித்து விரட்டப்பட்டுள்ளார்கள். பிறகு தாங்களைத் தாங்களே வெற்றி பெற்றுக் கொண்டதாக அறிவித்துள்ளனர். இதுதான் ஜனநாயகமா.? அதனால்தான் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் மீது உச்சகட்ட கொந்தளிப்பில் உள்ளனர். அதனால்தான் அவர் காரின் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. ஆனால் அப்போது அவர் கீழே இறங்கி இருந்தால் நிலைமை மோசமாகி இருந்திருக்கும் சின்னம்மா அமைதி காக்கும்படி கூறியிருப்பதால் அவரது தொண்டர்கள் அமைதியாக இருந்து கொண்டிருக்கின்றனர். இல்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமியின் வாகனம் தமிழகத்தில் எந்த திசையில் போகாது.

ஏன் நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு சவால் விடுகிறேன், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துங்கள், அதில் சின்னம்மா நிற்கட்டும், ஓபிஎஸ் இபிஎஸ் நீங்களும்  நில்லுங்கள், தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்று பார்ப்போம், அதற்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா? ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் நேற்று தொண்டர்களிடம் செருப்படி வாங்கி விட்டார்கள். இன்னும் என்ன மாதிரியான அவமானப்பட போகிறீர்கள் என்பது போகப் போகத் தெரியும், அவர்கள் நடத்தி இருப்பதை உட்கட்சி தேர்தல் என எந்த ஒரு அதிமுக தொண்டனும் ஏற்கவில்லை. இப்போது இது அதிமுக அல்ல பாஜகவின் தமிழகத்தின் பீ டீம், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி போட வந்தவர்கள் அடித்து விரட்டப் பட்டிருக்கிறார்கள். அப்படி என்றால் அதிமுக அலுவலகம் இப்போது  பாஜக தொண்டர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவின் சமூக விரோதியாக மாறி விட்டார். ஆனால் அவர் தொண்டர்களை சமூக விரோதிகள் என கூறிக் கொண்டிருக்கிறார். 

அவர்கள் நடத்தியது உட்கட்சி தேர்தலே அல்ல,  இதுவரை வாக்காளர் பட்டியல் வெளியிடவே இல்லை, அதில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள், யாரெல்லாம் ஓட்டு போடப் போகிறார்கள் என்ற விவரம் எதுவுமே இல்லை, யாரையுமே வேட்புமனுத்தாக்கல் செய்யவிடாமல் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துக் கொள்கிறார்கள். இது மிகவும் அவமானகரமான செயல். அதனால்தான் எடப்பாடி பழனிச்சாமி மீது தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளார்கள். அதனால் தான் அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டுள்ளது. இதே சின்னம்மாவின் ஆதரவாளர்களாக இருந்திருந்தால், காரை உடைத்து நொறுக்கி இருப்பார்கள். ஆனால் சின்னம்மா அமைதியாக இருக்குமாறு கூறியிருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசியவர்கள் அதிமுக தொண்டர்கள் தான் என அவர் கூறியுள்ளார். 
 

click me!