கோவையில் நம்மை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும்... எஸ்.பி.வேலுமணி போட்ட உத்தரவு..!

By Thiraviaraj RMFirst Published Dec 7, 2021, 5:11 PM IST
Highlights

காவல் துறை நம்மை தடுத்தால் அதை பார்த்துக்கலாம், காவல் துறை தேவையில்லாமல் எங்களை சீண்டாதீர்கள்

தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டம் கோவை கூட்டமாக இருக்க வேண்டும், நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

கோவை அதிமுக அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் மாவட்ட செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘’7 மாத ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செய்யாத திமுக அரசை கண்டித்து 9 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதத்தில் எதுவும் செய்யவில்லை. வெறும் விளம்பரத்தில் இந்த ஆட்சி ஓடுகின்றது.

பத்திரிகைகள் எங்களைதான் இப்போதும் விமர்சிக்கின்றன. அதிமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து எதுவும்  நடைபெறவில்லை. ஆனால் இப்போது மண் லாரி, மணல் லாரி, கிராவல் எதுவுமே ஓட்ட முடியாத நிலை இருக்கிறது.

தமிழக முதல்வர் அனைத்திற்கும் எங்கள் மீது பழி போடுகின்றார். அதிமுக குறித்துதான் பத்திரிகைகள், ஊடகங்கள் விவாதம் நடத்துகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அரசு ஊழியர் குறித்து ஊடகங்கள் ஏன் விவாதம் நடத்தவில்லை? ஊடகங்கள் இந்த ஆட்சியில் பயப்படுகின்றனர். 10 ஆண்டுகளாக காவல் துறை எப்படி இருந்தது? இப்போது அதிமுக மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். தமிழக முதல்வர் வரும் போது கூடிய கூட்டத்திற்கு காவல் துறை வழக்கு போடப்பட்டதா? 

கோவை காவல் துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். காலம் காலமாக இந்த அலுவலகத்தில் மீட்டிங் நடக்கும் போது கூட்டம் இருக்கும். கமிஷ்னர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் வந்து போராடும் நிலையை காவல் துறை ஏற்படுத்த கூடாது. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த ஆட்சியில் கொடுத்தோம். ஆனால் இந்த அரசு கோவையில் 300 சாலை பணிகளை ரத்து செய்து இருக்கின்றனர். கோவையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஒவ்வொரு டிவிசனில் இருந்தும் 200 பேர் அழைத்து வர  வேண்டும். ஒரு லட்சம் பேர் திரண்டு கோவையில்  நடத்தும் போராட்டத்தால், கோவையில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அரசு  செயல்படுத்த வேண்டும்.

ஆட்களை அழைத்து வருவதை கண்காணிக்க கட்சியில் இருந்து குழுக்கள் அமைத்துள்ளோம். தமிழகத்திலேயே மிகப்பெரிய கூட்டம் கோவை கூட்டமாக இருக்க வேண்டும். நம் கூட்டத்தை பார்த்து கோட்டையே நடுங்க வேண்டும். காவல் துறை வழக்கு போட்டால் எதிர்வினையாற்ற தயார் என்ற எச்சரிக்கையினை கோவை காவல் துறைக்கு வைக்கின்றோம். காவல் துறை நம்மை தடுத்தால் அதை பார்த்துக்கலாம், காவல் துறை தேவையில்லாமல் எங்களை சீண்டாதீர்கள்’’ என அவர் எச்சரித்துள்ளார். 

click me!