வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் தமிழ்நாட்டில் பல இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர்.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், ப.சிதம்பரம், நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி நடிகை ஷாலினி ஆகியோர் வாக்குகளை பதிவு செய்தனர்.
அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து வாக்கு செலுத்திவருகின்றனர். பொதுமக்களும் காலை முதலே ஆர்வத்துடன் சென்று வாக்களித்துவருகின்றனர்.
இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு தாமதமாகிறது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் இயந்திர கோளாறால் வாக்குப்பதிவு இன்னும் தொடங்கவில்லை. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதிகளிலும் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.
அவிநாசி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர், பாளையங்கோட்டை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி எண் 178 மற்றும் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறால் இன்னும் வாக்குப்பதிவு தொடங்காததால், வாக்களிக்க அங்கு சென்ற மக்கள் அதிருப்தியடைந்தனர்.