
நடிகர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு தொண்டாற்றியிருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றி பெறமுடியும் என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக், தனது 56-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திநகரில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்றுகலை நடும் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது, மரக்கன்றுகளை நட்ட விவேக், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக், நடிகர்கள் அனைவரும் அரசியலில் வெற்றி பெற்றுவிடமுடியாது. எம்ஜிஆர் நடிகராக இருக்கும்போதே மக்கள் பணி செய்தார். மேலும் அவரது திரைப்படங்களின் வாயிலாக நீதிபோதனைகளை வழங்கினார். அதனால்தான் அவரால் அரசியலில் வெற்றி பெற முடிந்தது.
எனவே நடிகர்கள், அரசியலில் ஈடுபட விரும்பினால், அவர்கள் ஏதாவது ஒருவகையில், மக்களுக்கு நற்பணிகளை செய்திருக்க வேண்டும். அப்படி மக்களுக்காக சேவையாற்றாதவர்களை, அரசியலில் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
நடிகர்களாக இருந்தாலும் மக்களுக்காக களத்தில் இறங்கி சேவை செய்பவர்களால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும் என விவேக் தெரிவித்தார்.
ரஜினி, கமல் ஆகியோரின் அரசியல் பிரவேசம் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில், இப்படியொரு கருத்தை விவேக் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.