முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு முகமாக கோயமுத்தூரில் நேற்று மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக ஸ்டாலின் கலந்து கொண்டார். திருமாவளவன், தா.பாண்டியன் உள்ளிட்ட மாற்று இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸின் தற்போதைய தலைவரான திருநாவுக்கரசர் மற்றும் மாஜி தலைவர்களான கிருஷ்ணசாமி, தங்கபாலு போன்றோரும் கலந்திருக்கின்றனர்.
இந்நிலையில் மேடையில் மைக் பிடித்த திருமாவளவன் “காங்கிரஸ் கட்சியை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் எதிரிகள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான வாதம். உண்மையில் விடுதலைப்புலிகளுக்கு போர் ரீதியாக பெரும் உதவியை தந்தது காங்கிரஸ்தான்.
ஈழத்தில் விடுதலைப்புலிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து கிடந்து போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் கையில் வலுவான ஆயதங்களும் இல்லை, போர் பயிற்சியும் பெரிதாக இல்லை.
இதையறிந்த பாரத பிரதமர் இந்திராகாந்தி அவர்களை அழைத்து தமிழ்நாடு உள்ளிட்ட இந்த தேசத்தின் பல இடங்களின் மலைப்பிரதேசங்களில் தங்க வைத்து நுணுக்கமான போர் பயிற்சியை கற்பிக்க வழி செய்தார். ஆயுத உதவியும் வழங்கப்பட்டது. இதன் பிறகு ஈழப்போராளிகளின் போர் குணம் பட்டை தீட்டப்பட்டு கூர் ஏறியது.
எனவே விடுதலைப்புலிகளை வளர்த்ததில் பெரும்பங்கு காங்கிரஸுக்கு இருக்கிறது.” என்று முடித்தார்.
ராஜீவ் கொலைக்குப் பிறகு விடுதலைப்புலிகள் என்ற வார்த்தையை கேட்டாலே காங்கிரஸ் சகிக்கமுடியாத அளவுக்கு கோபம் கொள்வது வாடிக்கையாகி இருக்கும் நிலையில் இந்திராவின் பிறந்தநாள் மேடையிலேயே திருமா இப்படியொரு வரலாற்றை பகிர்ந்திருப்பது ஆச்சரிய அதிர்ச்சியே என்கிறார்கள் விமர்சகர்கள்.