"திராவிட கட்சிகளை பாஜக நசுக்க பார்க்கிறது" - விஜயதாரணி விளாசல் பேட்டி!!

First Published Aug 5, 2017, 12:13 PM IST
Highlights
vijayadharani about bjp


தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளை பாஜக நசுக்க பார்க்கிறது. இதை தடுக்க அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறினார்.

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, அதிமுக துணை பொதுசெயலாளர் டிடிவி.தினகரனை, பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது, அவரது மாமியார் சந்தானலட்சுமியின் மறைவு குறித்து, அரசியல் பாரபட்சமின்றி துக்கம் விசாரிக்க சென்றதாக தெரிவித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, தமிழகத்தை ஆளும் அதிமுகவை உடைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் செயல்பாட்டை பாஜகவே தீர்மானித்து, நடைமுறைபடுத்தி வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபட பாஜகவுக்கு தகுதியே இல்லை.

இன்று அதிமுகவை நசுக்கி வேடிக்கை பார்க்கும் பாஜக, நாளை திமுகவையும் இதேபோல் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிப்பதற்கு பாஜக திட்டம் தீட்டி கொண்டு, அதை செயல்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்கு யாரும் இடம் கொடுக்க மாட்டார்கள்.

பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தமிழகத்தில் மத பிரவேசத்தை பாஜக துவங்க நினைக்கிறது. அதற்கு, எக்காரணம் கொண்டும் இடம் தரக்கூடாது. பாஜகவை காலூன்ற விட கூடாது. பாஜக, அதிமுகவில் அதிமுக்கமும், அழுத்தம் கொடுத்து கொண்டே இருக்கிறது.

பாஜகவின் துன்புறுத்தலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. பாஜகவின் பல்வேறு செயல்களை கண்டு கொண்டு இருக்கிறோம். இதில், நானும் சிக்குவேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை பற்றி நான் கவலையும் படவில்லை.

பாஜகாவை பற்றி விமர்சிப்பவர்களுக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினரால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதை நான் அறிவேன். இப்போது நான் கொடுக்கும் பேட்டியை வைத்து, எனக்கு அவர்கள் தொல்லை கொடுக்கலாம். அதை பற்றி நான் கவலைப்பட்டால், இங்கு உங்களிடம் நின்று பேச மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!