டிடிவி தினகரனின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியில் 18 அமைப்பு செயலாளர்கள் உள்பட புதிய நிர்வாகிகளை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அறிவித்தார்.
புதிய நிர்வாகிகளில் எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், எஸ்.டி.கே. ஜக்கையன் உள்ளிட் 18 பேர் அமைப்பு செயலாளர்களாக நியமிப்பட்டுள்ளனர்.
அதேபோல் புரட்சி தலைவி அம்மா பேரவைக்கு 8 இணைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீனவர் பிரிவு, விவசாய, மகளிர் பிரிவுகளுக்கு இணை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியில் அங்கீகாரம் இல்லாத டி.டி.வி. தினகரன் அளித்த மகளிர் அணி இணை செயலாளர் பதவி தேவையில்லை என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் செயல்படப் போவதாகவும் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர் செல்வம் கூறியிருந்தார். அதேபோல் எம்.எல்.ஏ. பழனி மற்றும் எம்.எல்.ஏ. போஸ், தினகரன் அளித்த பதவியை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளர்.
இந்த நிலையில், வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், டி.டி.வி. தினகரனின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என்று கூறியுள்ளார்.
மதுரையில், செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார், டிடிவி தினகரன் அறிவிப்பு கேலிக்குரியது என்றும், அவரின் கேலிக்கூத்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். தகுதியானவர்களுக்க பதவி அளித்தது ஏற்புடையதுதான். ஆனால் நியமன முறை சரியில்லை என்று கூறினார்.