அந்த 15 நாட்கள் காலம் தான் லைம்லைட்டுக்கு வர இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவம் செய்து கொள்ள லண்டன் செல்வது வழக்கம். ஆனால், கடந்த 2018-க்குப் பிறகு, அவர் லண்டன் சென்று சிகிச்சை மேற்கொள்ளவில்லை. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவர் லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், கொரோனா பாதிப்பு மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் என அப்போது அவர் பிஸியாக இருந்ததால், அந்தப் பயணமும் ரத்தானது. இந்நிலையில், வரும் ஜூலை 10-ஆம் தேதி அவர் லண்டன் செல்ல இருப்பதாகவும், 15 நாள்கள் பயணமாக லண்டன் செல்ல உள்ள மு.க.ஸ்டாலின், அங்கு மருத்துவ சிகிச்சையை முடித்துவிட்டு, தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வருவதற்கான சில சந்திப்புக்களையும் மேற்கொள்வார் என்று தகவல்கள் கூறுகின்றன.
அந்த 15 நாட்கள் காலம் தான் லைம்லைட்டுக்கு வர இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தமிழகத்தில் துணை முதல்வர் என்கிற பதவி, முதன்முறையாக 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, தன் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை உருவாக்கிக் கொடுத்தார். அதன்பிறகு, 2016-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இறந்தபிறகு, அந்தக் கட்சிக்குள் அதிகாரத்திற்கு அடித்துக் கொண்ட, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸை சமாதானம் செய்து, கட்சியை நடத்த ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.
அதில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தொடர்ந்தார். ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார். ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அப்படி ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அதற்கான தேவையும் எழவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் லண்டன் செல்வதால், அந்த நேரத்தில் நிழல் முதலமைச்சராக உதயநிதி செயல்பட உள்ளார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். இதுவே, அவர் எதிர்காலத்தில் துணை முதலமைச்சராக வருவதற்கான அறிகுறிகள் என்கின்றனர் தி.மு.க உடப்பிறப்புகள்.