கஜானாவை காலி செய்து சானிடைசர் போட்டு துடைத்துவிட்டார் பழனிசாமி... முதல்வரை தாறுமாறாக விமர்சித்த தினகரன்..!

By vinoth kumarFirst Published Mar 26, 2021, 4:54 PM IST
Highlights

சசிகலா காலில் விழவில்லை என்று சொல்பவர். இனி நான் பழனிசாமி அல்ல குப்புசாமி என்றோ, காலில் விழுந்தது என் தம்பி என்றோ கூட சொல்வார். பழனிசாமி அரசு கஜானாவை காலி செய்து சனிடைசர் போட்டு துடைத்து விட்டது.

10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறி வன்னியர் மக்களை ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி யில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வீரபாண்டி தொகுதி வேட்பாளர் எஸ்.கே.செல்வம், சேலம் தெற்கு வேட்பாளர் எஸ்.இ.வெங்கடாஜலம், எடப்பாடி வேட்பாளர் பூக்கடை சேகர், சேலம் மேற்கு தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட 11 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்;- எட்டப்பராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தால் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முடியவில்லை. அர்பனுக்கு வாழ்வு வந்தால், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்பது போல, சசிகலாவை கட்சியில் சேர்க்க முடியாது என்கிறார் அண்ணன் பழனிசாமி. அண்ட புழுகன், ஆகாச புழுகன் என்பதுபோல எதிர்காலத்தில் எடப்பாடி பழனிசாமி புழுகன் என்று புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

எத்தனை கோடிகள் இருந்தாலும், ஆட்சி அதிகாரம் இருந்தாலும், மக்களின் வரிப்பணத்தை சுரண்டியவர்கள் அதற்கான தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். 10.5 சதவீதம் என வன்னியர் சமுதாய மக்களை ஏமாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சாதாரண டெண்டர் முதல் கொரோனா வரை ஆளுங்கட்சி ஊழல் செய்துள்ளது. பிறப்பு சான்றிதழ் இறப்பு சான்றிதழ் வரை அனைத்துத் துறைகளிலும் லஞ்சம்.

சசிகலா காலில் விழவில்லை என்று சொல்பவர். இனி நான் பழனிசாமி அல்ல குப்புசாமி என்றோ, காலில் விழுந்தது என் தம்பி என்றோ கூட சொல்வார். பழனிசாமி அரசு கஜானாவை காலி செய்து சனிடைசர் போட்டு துடைத்து விட்டது. நவீன எட்டப்பன் எடப்பாடி பழனிசாமி என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

click me!