வடிவேலுவின் கிணத்தை காணோம் காமெடி போலவே இருக்கே?... செங்கல் திருடியதாக உதயநிதி ஸ்டாலின் மீது புகார்!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 26, 2021, 4:48 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக, நீதிபதி பாண்டியன் என்ற பாஜக நிர்வாகி கோவில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

திமுக இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உள்ளார். அதுமட்டுமின்றி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். மதுரை மாவட்டம் விளாத்திகுளத்தில் பிரச்சாரம் செய்த போது எய்ம்ஸ் என எழுதப்பட்ட செங்கலை கையில் ஏந்தியபடி வந்த உதயநிதி ஸ்டாலின்,  3 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டிக் கொடுத்தார்கள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அதைக் கையோடு எடுத்து வந்துவிட்டேன். மதுரையில் அதிமுகவும், பாஜகவும் கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான்” எனக் கூறி ஒரு செங்கல்லை எடுத்துக்காட்டினார். 

உதயநிதி செங்கலுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இருந்த செங்கலை திருடியதாக, நீதிபதி பாண்டியன் என்ற பாஜக நிர்வாகி கோவில்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சொத்தின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்குள் இருந்து செங்கலை திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடி கொண்டு வந்துள்ளார். இந்த உண்மையை அவரே நேற்று (25.03.2021) விளாத்திக்குளம் பேருந்து நிலையத்திற்கு முன்பு நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்தார்.

அவரின் இத்தகையை செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 380ன் படி தண்டிக்க தக்க குற்றச் செயலாகும். ஆகவே சமூகம் காவல் ஆய்வாளர் அவர்கள் இப்புகார் மனு மீது விசாரணை செய்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் வளாகத்திற்குள் இருந்து செங்கலை திருடிக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அதனை விளாத்திக்குளத்தில் வைத்து ஒப்புக்கொள்ளவும் செய்துள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கலை கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்று தந்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!