
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், ஆர்.கே. நகர் தொகுதி காலியாக உள்ளது. இதையொட்டி அடுத்த மாதம் 12ம் தேதி, இந்த தொகுதியில் இடை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளன. இதையொட்டி திமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் இன்று தொடங்கியது. வேட்பாளர் நேர்க்காணல் வரும் 13ம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
அதேபோல், அதிமுகவின் 3 அணிகளில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். ஓ.பி.எஸ். அணியில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிப்பதாக தெரிவிக்கப்படுள்ளது. இதைதொடர்ந்து சசிகலா அணியில், அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆர்.கே. நகர் தொதியில் போட்யிடப்போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய டி.டி.வி.தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, என்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும்படி கூறினால், நான் போட்டியிட தயார் என கூறியுள்ளார்.
இதற்கிடையில், பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஆர்கே நகர் தொகுதியில் 4 முனை போட்டி நிலவும் என பேசப்படுகிறது. ஆனாலும், தேமுதிக மற்றும் மக்கள் நலக் கூட்டணி கட்சியினர் இதுவரை எவ்வித தகவலும் வெளியிடாமல், ஆலோசனையில் ஈடுபட்டுவருவதால், இடை தேர்தலில் மேலும் பல பரபரப்புகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.