
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், டிசம்பர் 29-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். தொடர்ந்து ஓபிஎஸ் பிப்ரவரி 5-ம் தேதி தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் சசிகலா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, முதல்வராகும் முயற்சியை எடுத்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி ஓபிஎஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதால், அடுத்தநாள் அவர் அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவருக்கு ஆதரவளித்த மதுசூதனன் உள்ளிட்டோரை கடசியிலிருந்து நீக்கி சசிகலா உத்தரவிட்டார். ஆனால் தங்களை நீக்க சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை என ஓபிஎஸ் தெரிவித்தனர்.
மேலும் அதிமுகவின் சட்ட விதிகளை காரணம் காட்டி, சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மதுசூதனன் கடிதம் எழுதினார்.
கடந்த 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் சசிகலா சிறைக்கு சென்றார்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவு எம்பியான வி.மைத்ரேயன் தலைமையில் 11 எம்பிக்கள் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 16-ம் தேதி டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புகாருக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. சசிகலா இப்போது இருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீஸுக்கான பதிலை அதிமுகவின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அனுப்பினார். ஆனால் அந்த பதிலை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்று அறிவித்துள்ளது.
நோட்டீஸுக்கு சசிகலாதான் பதிலளிக்க வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் சசிகலா கையெழுத்திட்ட பதிலை அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சசிகலா இன்று தேர்தல் ஆணையத்துக்கு தனது பதிலை அனுப்பியுள்ளார். சசிகலாவின் பதில் மனுவை அவரது வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையத்திடம் நேரடியாக வழங்கினர்.
அதில் பொதுக்குழு ஒப்புதல் பெற்ற பின்னரே தாம் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சசிகலா அந்த மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.
தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தவர்களே தற்போது அதை எதிர்ப்பதாகவும் சசிகலா அந்த தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.