வேகமெடுக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்.. முட்டிமோதும் கட்சிகள்..விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Dec 6, 2021, 6:47 PM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 21 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிகையை இறுதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகள் வரையறை செய்யப்பட்டு வரும் நிலையில், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து ஜனவரி மூன்றாவது வாரத்தில் தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட்டு பிப்ரவரி மாதத்தில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மற்றும் நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை இறுதி செய்யும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. மழை, வெள்ள நிவாரணத் தொகை, பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட பணிகளை ஜனவரி 15ம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற திமுக, நகர்புற தேர்தலும் அதே வெற்றி இலக்கை நோக்கி திட்டத்தை வகுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக கோட்டையாக இருக்கும் கோவை உள்ளிட்ட நகர்புறங்களில் திமுக அதிக இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்போடு  தேர்தல் பணி செய்து வருகின்றனர். அதிமுகவை பொறுத்தவரை ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், நகர்புற தேர்தலில் அதிக இடங்களில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்று பணியாற்றி வருகின்றனர். சசிகலா ரீ எண்ட்ரி, டிடிவி தினகரன், அமமுக போன்றவை அதிமுக விற்கு தேர்தல் நேரத்தில் சரிவை கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள்  கருத்து கூறி வருகின்றனர். இதனிடையே தேமுதிக வரும் போகும் நகர்புற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!