செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... மருத்துவக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு

By Kanimozhi PannerselvamFirst Published Aug 6, 2021, 7:19 PM IST
Highlights

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் முதலே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. முதல் அலையின் தாக்கம் குறைந்ததை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்பட்ட போதும், தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று அதிகரிக்க ஆரம்பித்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. கொரோனா 2வது அலை காரணமாக ஆன்லைன் வகுப்பு மூலமாகவே மாணவ, மாணவிகள் பாடம் பயின்று வருகின்றனர். 


தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடித்து வந்தது. இதையடுத்து செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், “இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். 

மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10.11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் ஆம் 16 தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான. விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

tags
click me!