கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் அரசியல் மாற்றத்தை பார்த்த பிறகு, பா.ஜ.க-வால் தென் இந்தியாவை என்றுமே ஆள முடியாது. என கூறிவருகின்றனர் அரசியல் அறிஞர்கள்.
எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க 104 இடங்களில் வெற்றி பெற்றும், எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் அமர்ந்தும் “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாக போய்விட்டது” கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சி.
மத்தியில் ஆட்சியில் இருந்தும் கர்நாடகாவில் தங்கள் அதிகாரத்தை பா.ஜ.க செலுத்தமுடியாமல் போனதற்கு, மிக முக்கிய காரணம் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தான்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின் போது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் இந்த டி.கே.சிவக்குமார் . அந்த சமயத்தில் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர், அகமது பட்டேலை குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருந்தது.
ஆனால், அகமது பட்டேலை தோற்கடிக்க பாஜக தலைவர் அமித்ஷா முயற்சி செய்து கொண்டிருந்தார். கர்நாடகாவில் இப்போது நடைபெற்றது போலவே, குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை, அகமது பட்டேலுக்கு எதிராக வாக்களிக்க வைக்க பாஜக பேரம் பேசியது.
அந்த அரசியல் சூழலை சமாளிக்க குஜராத்தை சேர்ந்த 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் , கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டனர். டி.கே.சிவகுமாரும் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்களை தங்க வைத்து பாதுகாத்தார்.
இதனால் அகமது பட்டேல் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதற்கு அவரை பழிவாங்கும் விதமாக, சிவகுமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஆனால் அதில் சிவகுமார் மாட்டிக்கொள்ளவில்லை.
தற்போது கர்நாடகாவில் நிலவிய இந்த சூழலையும் சிவகுமார் தான் சமாளித்திருக்கிறார். ம.ஜ.த-வை சேர்ந்த குமாரசாமி இவருக்கு எதிரியாக இருந்த போதும் காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்டதால் களத்தில் இறங்கி செயல்பட்டிருக்கிறார் சிவகுமார்.
குவாரி பிஸினஸ், ரியல் எஸ்டேட் என கொடிகட்டி பறக்கும் இவரிடம், பணபலம் அதிகார பலம் என அனைத்தும் இருப்பதால், இது போன்ற ஆப்பரேஷன்களை தைரியமாக நடத்தி முடிக்கிறார் இவர். வட கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் போல தான், தென் கர்நாடகாவில் சிவகுமாரும் அவரது சகோதரரும் காங்கிரஸ் எம்பியுமான டி.கே.சுரேஷும்.
2006-ல் மகாராஷ்டிராவில் விலாஷ் ராவ் தேஷ்முக் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதும் சிவகுமார்தான் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்தவர்.
இடவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வேறு எந்த கட்சியாலும் நெருங்க முடியாது. என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார் சிவகுமார். அதனாலேயே அவரை நம்பி இது போன்ற முக்கிய பொறுப்புக்களை கொடுக்கிறது காங்கிரஸ் மேலிடம்.
அதிலும் இம்முறை அமித்ஷா, ரெட்டி சகோதரர்கள் கூட்டணியை கர்நாடக மண்ணிலேயே வீழ்த்தி காட்டியிருக்கும் இவரது பலத்தை கண்டு, பா.ஜ.க கொஞ்சம் மிரண்டு தான் போயிருக்கிறது.
தமிழகத்திலும் சசிகலாவை அப்படி ஒரு பலம் வாய்ந்த நபராக கருதலாம். ஓ.பி.எஸ்-க்கு எதிராக எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் அடைத்து, ஈ.பி.எஸ்-ஐ பதவியில் அமர்த்திய விஷயத்தில், இவரது வியூகம் கூட சிவகுமார் போன்றது தான். ஆனால் சரியான ஆளை தேர்ந்தெடுப்பதில் தான் கொஞ்சம் சறுக்கிவிட்டார் சசிகலா.
சிவகுமார் , சசிகலா போன்ற ஆட்கள் இருக்கும் வரை, தென் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைப்பது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். என தெரிவிக்கின்றனர் அரசியல் ஆலோசகர்கள்.