அவங்க ரண்டு பேருக்கும் என்னோட முன்னாள் மாமா தான் ஏஜென்டு... திவாவை கிழிக்கும் தினா!

First Published May 21, 2018, 2:54 PM IST
Highlights
divakaran agent dinakaran


எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் ஏஜென்டாக திவாகரன் செயல்படுகிறார் என்று அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினகரனுடன் இணைந்து செயல்பட்டுவந்த திவாகரன், தனது மகனுக்கு பெண் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் கடந்த சில மாதங்களாக மோதல் உண்டானது.  இதனால் தினகரன் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த திவாகரன், “அம்மா அணி” என்ற புதிய அமைப்பையும் தொடங்கியுள்ளார். பதிலுக்கு திவாகரனுக்கு மனநிலை சரியில்லை என்று தினகரன் கூறினார்.

மேலும் சசிகலாவின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா சார்பில் திவாகரனுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதையடுத்து சசிகலா என்னுடைய முன்னாள் சகோதரி என்று திவாகரன் தெரிவித்துவிட்டார்.

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரனிடம், ‘திவாகரனுடன் உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட சொத்து தகராறுதான் காரணம் என்று கூறப்படுகிறதே’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு “என்னுடைய முன்னாள் மாமா திவாகரனுக்கும் எனக்கும் எந்த சொத்து தகராறும் கிடையாது.

அவர் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட துரோகக் கும்பலுடன் இணைந்துவிட்டார். அவர்களுடைய ஏஜென்டாக நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறார். இதனால் எங்கள் இயக்கத்தை ஒன்றும் செய்துவிட முடியாது.

எனவேதான், அவரை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குடும்ப ஆட்சி, அதிகார மையங்கள் இல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்படும்” என தினகரன் பதிலளித்தார்.

click me!