எல்.முருகன் நிகழ்ச்சியில் சேறு சகதி.. மாநகராட்சி அதிகாரிகளை ஏறி அடித்த பாஜகவினர்.. பரபரப்பு.

By Ezhilarasan BabuFirst Published Sep 4, 2021, 2:29 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக இருந்து வருகிறது எனக் கூறினார்.
 

மத்திய அமைச்சர் எல். முருகன் சென்னை மதுரவாயலில் தடுப்பூசி மையத்தை இன்று பார்வையிட வந்தார். அப்போது அந்த வலாகத்தை சுற்று சேறும் சகதியுமாக இருந்தது, இதனால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய முறையில் முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனக் கூறி தமிழக பாஜகவினர் அதிகாரிகளிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசின் உதவியுடன் தமிழகம் முழுவதும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசிகளை உரிய அழுத்தம் கொடுத்து மத்திய அரசிடம் இருந்து பெறும் முயற்சியில் தொடர்ந்து தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் விளைவாகவே தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில்  சென்னை மதுரவாயல் ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை இன்று மத்திய அமைச்சர் எல். முருகன் பார்வையிட்டார். பின்னர் தடுப்பூசி செலுத்த வந்த மக்களிடத்தில், சுகாதார மையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை தொடர்ந்து தங்கு தடையின்றி வழங்கி வருகிறது, அதனால்தான் தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்பதே பிரதமர் மோடியின் நோக்கமாக இருந்து வருகிறது எனக்கூறினார். 

முன்னதாக எல். முருகன் வருகை தர இருந்த இடத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளித்தது. இதனால் ஆத்தரமடைந்த பாஜகவினர் ஒரு மத்திய அமைச்சர் சுகாதார மையத்தை பார்வையிட வரும்போது, இப்படி மழை நீர் தேங்கி இருப்பது சரிதானா? அமைச்சர் வருகிறார் என்று தெரிந்திருந்தும் ஏன் இன்னும்  இந்த இடத்தில் முன்னேற்பாடுகள் செய்யவில்லை என கேட்டு அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவசர அவசரமாக மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் மணல் கொட்டி அதை சரி செய்யப்பட்டது. உடனே சுகாதார நிலையத்தை சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. ஆனாலும் அமைச்சர் நடந்து வரும் பாதை சரியாக இல்லை எனவும் அமைச்சர் வரும்போதே இப்படி ஒரு நிலை என்றால், மற்ற நாட்களில் நிலைமையை சொல்லவா வேண்டும் என பாஜகவினர் தலையில் அடித்துக் கொண்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 

click me!