மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை.. பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jul 12, 2021, 10:21 AM IST
Highlights

பார்வை மாற்று திறனாளி பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம், ஆனால், அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளதாக கருதுவதால். அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்வை மாற்று திறனாளி பெண் ஒருவர், எம்.சி.ஏ. படித்து வந்துள்ளார். பார்வை மாற்று திறனாளிகளுக்கு சென்னை வில்லிவாக்கம் பள்ளி ஒன்றில் இலவசமாக சங்கீத பயிற்சி வழங்குவதை கேள்விப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றுள்ளார். ஆட்டோ ஓட்டுனர் அன்புச்செல்வன் பள்ளிக்கு செல்லாமல், ரயில்வே தண்டவாளம் அருகே அந்த பெண்னை அழைத்தசென்று, கொலை செய்து விடுவதாக மிரட்டி,  பாலியல் கொடுமை செய்துள்ளார்.பின்னர் இரு வாலிபர்கள் மற்றும் இரு பெண்களால் அந்த பெண் மீட்கப்பட்ட நிலையில், அன்புச்செல்வன் தப்பி ஓடியுள்ளார். பின்னர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தினரால் அன்புச்செல்வன் கைது செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புச்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பு, அன்புச்செல்வன் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண் பார்வை மாற்றுத் திறனாளி என்பதால் அவரது சாட்சியை கண்ணுற்ற சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும், செவி வழி சாட்சியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்  வாதிடப்பட்டது. சம்பவத்தன்று ஆட்டோவை ஓட்டியது அன்புச்செல்வன் இல்லை என்றும்,  பாலியல் தொந்தரவு செய்ததை இரு வாலிபர்கள் மற்றும் இரு பெண்கள் நேரில் பார்க்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் சொன்னதாகவே அவர்கள் சாட்சியம் அளித்துள்ளதால், அவர்களது சாட்சிகளையும் செவி வழி சாட்சிகாக கருதி, விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

பின்னர் அவர் பிறப்பித்த தீர்ப்பில், பார்வை மாற்று திறனாளிகளின் நேரடி சாட்சியம், செவி வழி சாட்சியம் என்று ஒதுக்கி வைக்காமல், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, பிற சாட்சிகளுடன் ஒப்பிட்டு பார்த்து, முடிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பார்வை இல்லாவிட்டாலும், அவரது அழுகை சத்தம் கேட்டு, அங்கு வந்த நால்வரிடமும் கொடுமையை எடுத்து கூறியபோது, அன்புச்செல்வன் அங்கு இருந்தது நிரூபணம் ஆகியுள்ளதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்பவத்தன்று ஆட்டோவை அன்புச்செல்வன் தான்  ஓட்டினார் என்று ஆட்டோவின் உரிமையாளரும், வில்லிவாக்கம் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் தலைவரும் சாட்சியம் அளித்துள்ளதால், ஆட்டோ ஓட்டவில்லை என அன்புச்செல்வன் கூறுவதை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பார்வை மாற்று திறனாளி என்றாலும், உலகில் நடப்பவைகளை ஒலியினால் பார்த்து,  அருகில் இருப்பவர்களை அவர்களது குரலின்  சத்தத்தினால் அடையாளம் கண்டு, குரல் வழியாக அடையாளம் கண்டதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த சாட்சியத்தை புறம் தள்ளமுடியாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சராசரியான மனிதனின் சாட்சியத்தை விட எந்த வகையிலும் மாற்றுத் திறனாளிகளின் சாட்சியம் தரம் தாழ்ந்ததாக கருத முடியாது என்றும், அப்படி கருதினால், அரசியலமைப்புச் சட்டத்தில் அனைவரும் சமம் என்ற அடிப்படை கொள்கைக்கே முரணாகி விடும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி டீக்காராமன், பார்வை மாற்று திறனாளி பெண்ணின் கண்ணுக்குள் வேண்டுமானால் இருள் இருக்கலாம், ஆனால், அவரது சாட்சியத்தில் வெளிச்சம் உள்ளதாக கருதுவதால். அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

பார்வை மாற்றுத் திறனாளி இளம் பெண் மீது அன்பும், இரக்கமும் காட்டாமல், அவருக்கு பாலியல் கொடுமை செய்ய ஆட்டோ ஓட்டுனர் அன்புச்செல்வனுக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் சிறை தண்டனையில், ஒரு நாள் கூட குறைப்பதற்கு விரும்பவில்லை என கூறி, அதை உறுதி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்தை வழங்க தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டதுடன், இந்த வழக்கை திறமையாகவும், விரைவாகவும் புலன் விசாரணை செய்த வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு பாராட்டையும் பதிவுசெய்துள்ளார். 

 

click me!