கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம்..! சுனாமி, புயல் முன்னறிவதற்கான கருவிகளுடன் அமையும்- பொதுப்பணித்துறை

By Ajmal KhanFirst Published Feb 1, 2023, 2:42 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகளுடன் அமையவுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

மெரினா கடலில் பேனா சின்னம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடலில்  ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவு சின்னம் அமைத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தற்போது உள்ள கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் இருந்து 290 மீ தூரத்திற்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரத்திற்கும் என 650 மீட்டர் தொலைவிற்கு கடலில் பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தீவிர நடவடிக்கையை பொதுப்பணித்துறை மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து  கடலில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவும், எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளை பதிவு செய்தனர்.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.! ஓபிஎஸ், இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் டிடிவி தினகரன்

நினைவு சின்னம் எப்படி அமைகிறது.?

இந்தநிலையில் கருணாநிதி நினைவிடம் தொடர்பாக பொதுப்பணித்துறை அளித்துள்ள விளக்கத்தில், மூன்று பணித்தளங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவை கடல்சார் சூழியியல், சமூக பொருளாதார மற்றும் வாழ்வியல் காரணிகளால் ஒப்பீடு செய்யப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத பகுதியில் கலைஞர் நினைவிட வளாகத்தின் அருகில் கடற்பரப்பினுள் சுமார் 360 மீட்டர் தொலைவில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம்  கலைஞர் நினைவிடத்திலிருந்து சுமார் 650 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்ட அணுகு பாலமானது ஆகும். இது கடற்கரை தரைமட்டம் மற்றும் கடற்பரப்பின் உயர்நீர்மட்டம் (HTL) ஆகியவற்றிலிருந்து சுமார் 6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படவுள்ளது. 

கலைஞர் நினைவிடத்தின் நிழல் மீது கை வைத்தால்______இருக்காது.! சீமானுக்கு எச்சரிக்கை விடும் திமுக எம்எல்ஏ

பேரிடர்கால முன்னெச்சரிக்கை

ஆழிப்பேரலை, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்னறிவதற்கான உரிய கருவிகள்  பொருத்தப்பட்டு அபாய காலங்களில் வளாகத்தினுள் பொது மக்களின் அனுமதி முற்றிலுமாக தடை செய்யப்படும். மேலும், அத்தகைய காலங்களில் வளாகத்தினுள் இருக்கும் மக்களை ஆபத்திலிருந்து மீட்க தேவைப்படும் உபகரணங்களோடு உரிய பயிற்சி பெற்ற மீட்புபடையினர் பணியமர்த்தப்படுவார்கள். இவ்வளாகத்தில் பொதுமக்களின் எண்ணிக்கை ஒரு நேரத்தில் 300  நபர்களுக்கு மேற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு, மின்சக்தியால் இயங்கும் வாகனங்கள் மற்றும் மீட்புப் படகுகள் உதவியுடனும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். நினைவுச் சின்னத்தின் வடிவமைப்பானது ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், பெருங்காற்று. நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளை கருத்தில் கொண்டு அவற்றை தாங்கும் வண்ணம் உரிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் சென்னை - இந்திய தொழில்நுட்ப கழக வல்லுனர்களின் அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உரிய முறையில் கழிவு அகற்றப்படும்

இவ்வளாகத்தின் ஆழ்துளையிடும் கட்டுமானப் போதும் பணிகளின் ஏற்படும் கழிவுகள் உரிய இயந்திரங்களால் உறிஞ்சப்பட்டு, கடற்பரப்பிற்கு வெளியே உரிய முறையில் சூழலியல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் அகற்றப்படும். மேலும், கட்டுமான பணிகளின் போது ஏற்படும் கழிவு பொருட்களும் அவ்வாறே உரிய முறையில் அகற்றப்படும். இவ்வளாகம் கட்டப்படுவதால் ஏற்படும் கடல் மண்ணரிப்பு மற்றும் மண் சேமிப்பு குறித்த ஆய்வினை தேசிய கடல்சார் ஆய்வு மையத்தின் (NCCR) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வண்ணம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சத்ரபதி சிவாஜி-கட்டமைப்பு முன்னுதாரணம்

இத்திட்டத்தினால் ஏற்படக்கூடிய கூடுதல் போக்குவரத்து மற்றும் மக்கள் கூடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தேவையான சாலை இணைப்புகள் குறித்து உரிய ஆய்வுகள் மேற்கொள்ளவும், விரிவான போக்குவரத்து மேலாண்மை ஆய்வு மேற்கொள்ளவும் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் கூட்டு நிறுவனமான நகரமயமாக்கல், கட்டடம், சுற்றுச்சூழல் மையம் மூலமாக உரிய நிபுணர்களால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத்திட்டமானது மகாராஷ்டிரா அரசால், மும்பையில் அமைக்கப்பட்டு வரும் சத்ரபதி சிவாஜி திருவுருவச்சிலை கட்டமைப்பை முன்னுதாரணமாக வைத்து அமைக்கப்படவுள்ளது.

தடையில்லா சான்றிதழ் பெற நடவடிக்கை

மேலும், இத்திட்டத்திற்கு தேவையான கடல்சார் மேலாண்மை குழும அனுமதி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றின் அனுமதியும் பெற உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், இத்திட்டத்தற்கு தேவையான சென்னை துறைமுகம், தேசிய கடலோர பாதுகாப்புப் படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவற்றின் தடையில்லா சான்றிதழ் பெற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக? கூட்டணி பெயரும் மாற்றம்! மோடியின் படமும் நீக்கம்! இபிஎஸ் அதிரடி.!

click me!