மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும். மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை.. PTR தியாகராஜன்.

By Ezhilarasan BabuFirst Published Jun 2, 2021, 11:01 AM IST
Highlights

மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் மாநில அரசு திட்டங்களை பெற முடியவில்லையா? ஜனநாயக நாட்டில் மத்திய மாநில அரசின் இணக்கம் என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் அல்ல. இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும். மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை. 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர்களை எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தால் அதன் விவரம்:  முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததால் இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம் சாட்டி உள்ளாரே? 

என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இதற்கான தகவல் இருந்தால் அளிக்கட்டும். கொரோனா இறப்பை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள அடிப்படை வித்யாசத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு சொல்கிறேன். இது குறித்து நான் வழக்கே தொடர்ந்துள்ளேன். கடந்த ஜூலை ஆகஸ்டில் அவர்கள் கொரோனா இறப்பை 200  என கணக்கு காண்பித்தார்கள். அன்றைக்கு இரண்டே இரண்டு மயானத்தில் 1400 பேருக்கு இறுதி சடங்கு நடந்தது. நான் அப்போதே தகவல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். வழக்கும் தொடர்ந்து அரசாங்கத்தை நீதிமன்றம் தட்டி கேட்டது.

அத்திவாசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே?

என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் , பொதுவாகவே இயல்பான ஊரடங்கு காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அதில் எந்த அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். அமைச்சர் மூர்த்தி இதில் தனிக்கவனம் செலுத்தி அதிகாரிகளிடம் நாங்கள் ஆலோசனை நடத்தி பொருட்கள் வழங்குவதில் பற்றாக்குறையும் விலை ஏற்றமும் இல்லாதவகையில் நடவடிக்கை எடுத்தோம். சில விஷயங்கள் தவறு நடந்த பிறகு தான் திருத்திட முடியும். அந்த வகையில் தான் சமீபத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மூலம் சிகிச்சை பெற்றவருக்கு 64000  ரூபாய்  பணம் திரும்ப பெற்று தரப்பட்டுள்ள்ளது. இந்த தவறுகள் மறுபடியும் நடைபெறாத வகையில் அமைச்சர் தலைமையில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஆலோசனை கூட்டமும் நடத்தி உள்ளோம். கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளோம். இத்தனையும் தாண்டி தனிப்பட்ட முறையில் தவறுகள் நடந்தால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறித்து ?

தமிழ் நாட்டிலேயே தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைத்தது மதுரை மாவட்டத்தில் தான். இங்கு கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொழிற்சாலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது .அரசியல் பாகுபாடு இல்லாமல் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மதுரை மாவட்டம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உலக அளவில் தடுப்பூசி குறைபாடு இருக்கிறது .எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் 8  கோடி தடுப்பு ஊசிகள் கூடுதலாக வைத்து உள்ளார்கள். அதனை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் நானும் பங்கெடுத்தேன்.  உலகத்தியிலேயே அதிகம் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுகிறது. திட்டமிடாமல் சில மாதங்களுக்கு ஏன் ஏற்றுமதி செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

தடுப்பூசியை பொறுத்தவரையில் தொழில் துறை அமைச்சரை டெல்லிக்கு அனுப்பி செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலையை குத்தகைக்கு எடுத்து தமிழ்நாடு அரசே  தடுப்பூசி உற்பத்தியில் இறங்கலாம் என்ற ஏற்பாடும் இருக்கிறது. தொலை நோக்கு பார்வையோடு இதனை அணுகி தொழிலதிபர்கள் சி.எஸ். ஆர் மூலம் 5000  முதல் 8000  லிட்டர் ஆக்ஜிசன் உற்பத்தியை இங்கு இருந்தே செய்திடும் திட்டமும் உள்ளது. அதே போல் தடுப்பூசி உற்பத்தியில் கவனம் செலுத்துவோம் இதனை பாடமாக எடுத்துக்கொண்டு தடுப்பூசி உற்பத்தியை கொண்டு வருவதற்கான அம்சங்கள் ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட்டில் இடம்பெறும். 

மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் மாநில அரசு திட்டங்களை பெற முடியவில்லையா? ஜனநாயக நாட்டில் மத்திய மாநில அரசின் இணக்கம் என்பதெல்லாம் தனி நபர் விருப்பம் அல்ல. இணக்கமாக இருந்துதான் செயல்பட வேண்டும். மாநிலம் இல்லாமல் ஒன்றியம் இல்லை. அதனை விடுத்து அரசியல் செய்யவா ஒன்றிய அரசு இருக்கிறது என கேள்வி எழுப்பினார். கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் உடன் இருந்து கவனித்து கொள்பவர்களுக்கும் தரமான உணவு வழங்கப்படுகிறது. இதில் ஏதேனும் குறை இருந்தாலும் எங்கு குறை உள்ளது என தெரிவித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

click me!