
ஆர்.கே.நகரில் தினகரனுக்கு அனுதாபத்தால் கிடைத்த வெற்றி என்றும், திமுகவை டெபாசிட் இழக்க செய்த ஆர்.கே.நகர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். ஆடிட்டர் குருமூர்த்தி நாவை அடக்கி பேச வேண்டும் என்றும், அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் குருமூர்த்தி தலையிடக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் impotent என கூறி பேசியதை அமைச்சர் ஜெயக்குமார் “impotent” என்ற வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்? நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா? யாருக்கு ஆண்மை இல்லையோ அவர்களே மற்றவர்களை பார்த்து ஆண்மை இல்லை என்பார்கள். முதலில் குருமூர்த்திக்கு ஆண்மை இருக்கிறதா என செக் பண்ணி பார்க்கட்டும் என நேற்று பதிலடி கொடுத்திருந்தார்.
அமைச்சரின் இந்த பேட்டியை அடுத்து ஆடிட்டர் “impotent” என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்கமாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். நான் பேசியதன் அர்த்தம் புரியாமல் என்னை அவதூறாக அமைச்சர் பேசிய தெருப்பேச்சுக்கு நான் பதில் தெருப்பேச்சில் நான் ஈடுபட்டால் தான் நான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என அமைச்சருக்கு விளக்கமளித்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆடிட்டரின் இந்த விளக்கத்துக்கு பதிலளித்த அவர்; “புறம்போக்கு” நிலம் என்பதை புறம்போக்கு என தனியாக சொன்னால் கோபம் வருமா? வராதா? என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பத்திரிகையாளர் என்ற பண்பு இருக்கும் என நம்புகிறேன் என்று தனது பேட்டியில் வித்தியாசமாக பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், குருமூர்த்தி நாவை அடக்கிப் பேச வேண்டும். இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டால், அதிமுகவின் எதிர்ப்புக்கு நிச்சயமாக பதில் சொல்லியாக வேண்டும். விளம்பரத்துக்காக குருமூர்த்தி பேசி வருகிறார். அதிமுகவை பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்தவிதமான அருகதையும் கிடையாது. குருமூர்த்தி போன்றவர்கள்,
அதிமுகவை குற்றம் சாட்டுவது எங்களுக்கு வேதனையாக உள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் குருமூர்த்தி தலையிடக் கூடாது என்றார்.
மேலும் பேசிய அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டிடிவி தினகரன் அனுதாபத்தால் வெற்றி பெற்றதாக கூறினார். தினகரன் வெற்றி தற்காலிகமானதுதான் என்றும், அதிமுக கொடுத்த நெருக்கடியால்தான் தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் கூறினார். ஆர்.கே.நகரில், திமுகவை டெபாசிட் இழக்க செய்த ஆர்.கே.நகர் மக்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறித்து, மு.க. அழகிரி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அழகிரியின் குற்றச்சாட்டுக்கு ஸ்டாலின்தான் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.