மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் உள்ளவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் உள்ளவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறுகையில்;- சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே பிறகு பிப்ரவரி 26-ம் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும், தொகுதிகளை ஒதுக்கக் கோரியும் கடிதம் கொடுத்தோம். எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, மார்ச் 10-ம் தேதி அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டிப் பேசினோம். இதில், மதச்சார்பற்ற வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதற்காக திமுகவை ஆதரிக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மார்ச் 11-ம் தேதி ஸ்டாலினைச் சந்தித்துப் பேசிய போது, தொகுதிகள் குறித்து கேட்டோம். ஆனால், மு.க.ஸ்டாலின் தற்போதைய சூழ்நிலையில் எங்களுக்கு தொகுதி ஒதுக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்தார்.
அதனால், மு.க.ஸ்டாலினிடம் தண்டனைக் காலம் முடிந்தும் விடுவிக்கப்படாத சிறைவாசிகள் விடுதலை, பூரண மதுவிலக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களுக்குப் பிரதிநிதித்துவம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல், சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுதல் ஆகிய 5 அம்சக் கோரிக்கைகளைக் கடிதமாகக் கொடுத்துவிட்டு வந்தோம். சீட் கொடுக்காதது வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், தனித்து நின்றால் எங்கள் வாக்குகள் பிரிந்து பாஜக - அதிமுக கூட்டணி வென்றுவிடக் கூடாது என்பதால், நாங்கள் எடுத்த தியாகபூர்வ முடிவு இதுவாகும் என்றார்.
மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மரியாதை உண்டு. அவர் பாஜக அழுத்தங்களுக்கு ஆளாகக்கூடும் என்கிற சந்தேகம் இருக்கிறது. அதேசமயம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் உள்ளவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்று ஐயம் நிலவி வருகிறது.