தென்காசியில் ஆசிரியை ஒருவர் தன்னுடைய தபால் வாக்கினைபுகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மற்றும் முகநூலில் பதிவிட்டது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என வைத்தது பரபரப்பைக் கிளப்பியது.
தென்காசியில் தபால் வாக்குப்பதிவிற்கான வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப், முகநூலில் பதிவிட்ட ஆசிரியை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியில் தமிழகம் முழுவதும் 5 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 89 ஆயிரத்து 185 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தென்காசியில் ஆசிரியை ஒருவர் தன்னுடைய தபால் வாக்கினைபுகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் குரூப் மற்றும் முகநூலில் பதிவிட்டது ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என வைத்தது பரபரப்பைக் கிளப்பியது. குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்துள்ளதை விளம்பரப்படுத்தும் வகையில் சோசியல் மீடியாவில் ஆசிரியை பகிர்ந்தது தேர்தல் நன்னடத்தை விதிமீறலாகும். எனவே அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் தென்காசி தொகுதியி களமிறங்கியுள்ள பழனி நாடார் புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்ய வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்கள் குவிந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடைபெற்றது. முதலில் வாக்குச்சீட்டை சோசியல் மீடியாவில் பகிர்ந்தது அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை சகாயமரியாள் என கூறப்பட்டு வந்த நிலையில், விசாரணையில் வெள்ளக்கால் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை கிருஷ்ணவேனி என்பது தெரியவந்தது. தன்னுடைய மகனுக்கு காண்பிக்கவே வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்ததாகவும், தன்னுடைய கணவர் குறிப்பிட்ட கட்சியில் நிர்வாகியாக உள்ளதால் அவர் அதை வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்ததாகவும், அதை அவருடைய நண்பர் முகநூலில் பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியை கிருஷ்ணவேனி, கணவர் கணேச பாண்டியன், அவருடைய நண்பர் செந்தில்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.