பிஞ்சுக்குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமான சுமையினை ஏற்றி கரும்பு சக்கையாகப் பிழியும் போக்கினை கைவிடவும். குழந்தைகள் ஆர்வத்தோடு பள்ளிக்குவர வழைக்க வேண்டுமே தவிர பள்ளியினைப் பார்த்தால் பயந்தோடச் செய்யக்கூடாது.
பள்ளிக்கு வர சிறார்களை பயமுறுத்தும் சிறப்பு வகுப்புக்கான சுற்றறிக்கையினை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:- பள்ளிக்கல்வித்துறையின் பல்வேறு நடவடிக்கையினால் எதிர்காலத்தில் அரசுபள்ளிகளை மூடும் அபாயம் ஏற்படுமா.? என்ற அச்சம் ஏற்படுத்துகிறது. 8 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு மாலை கூடுதலாக ஒரு மணிநேரம் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் ஒரு மணிநேரம் பள்ளியில் இருந்தால் மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு மனஅழுத்தத்தால் மனநிலை பாதிக்கும் அபாயம் உள்ளது.
தரமானக்கல்வித் தருவதாக நினைத்து பிஞ்சுக்குழந்தைகளுக்கு தேவைக்கு அதிகமான சுமையினை ஏற்றி கரும்பு சக்கையாகப் பிழியும் போக்கினை கைவிடவும். குழந்தைகள் ஆர்வத்தோடு பள்ளிக்குவர வழைக்க வேண்டுமே தவிர பள்ளியினைப் பார்த்தால் பயந்தோடச் செய்யக்கூடாது. மெல்லக்கற்கும் குழந்தைகளை அவரவர் மனநிலைக்கேற்ப பாடத்தினை உருவாக்க வேண்டுமே தவிர ஒரே நாளில் திணிக்கும் முயற்சி பலனளிக்காது. மாறாக இது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு பாடம் தயாரிக்கும் போதே அவர்களுக்கு எது பிடிக்குமோ அதனையறிந்தும் சிறந்த உளவியல் ஆலோசர்களிடம் ஆலோசனைப் பெற்றப்பிறகே பாடப்புத்தகம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
தரமானகல்வி அளிக்கவேண்டுமென்பதற்காக விளையாட்டுப் பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகளுக்கு போட்டித்தேர்வுக்காக பழக்கப்படுத்துகிறேன் என்று பிஞ்சுகளின் கனவுகளுக்கு கடிவாளம் போடக்கூடாது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற அறிவிப்பால் பெற்றோர்கள் பயத்தால் குழந்தைகளின் சின்னசின்ன சந்தோசங்களை பறிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் முடிந்துபோன, ஏன் மறந்போன இரண்டு பருவத்தின் புத்தகங்களையே தொலைத்துவிட்ட நிலையில் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தினந்தோறும் இரண்டு பருவங்களின் பாடத்தினை வினாக்களை படித்து தேர்வு எழுதச்சொல்வது எவ்வகையில் நியாயம். பள்ளிக்கூடம் என்றால் குழந்தைகள் பள்ளிக்கு வருவதே கேள்விக்குறியாகும்.
ஒரு மணிநேர சிறப்பு வகுப்பில் திங்கள் முதல் வெள்ளிவரை தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் தினந்தோறும் தேர்வெழுதவேண்டும் என்றால் எதிர்காலத்தில் அரசுபள்ளிகளில் மாணவர்கள் தொடர்வது கேள்விக்குறியாகும் நிலை உருவாகும். தமிழ்நாடு படிப்பறிவில் பின்னடைவு ஏற்படும் என்பதால் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்றிடவும் குழந்தைகளின் மனநிலையினைக் கருத்தில் கொண்டும் 8 ஆம் வகுப்புக்கு சிறப்புவகுப்புகளுக்கான முடிவினை மறுபரிசீலனை செய்தும் 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வினை ரத்துசெய்திட மாண்புமிகு முதல் அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறது.