தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாநில, தேசிய கட்சிகளின் ஒட்டுமொத்த செலவு ரூ.176.06 கோடி எனத் தெரியவந்துள்ளது. ஜனநாயக சீரமைப்புக்கான அமைப்பு(ஏ.டி.ஆர்.) என்ற தனியார் தொண்டு நிறுவனம் தேர்தல் ஆணையத்திடம் இருந்து தகவல்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, பா.ம.க., மக்கள் நலக்கூட்டணியில் 5 முக்கியக் கட்சிகள் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க. கட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இதில் தேர்தலில் தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரு தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்படுவதை காரணம் காட்டி இரு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தலில் முக்கிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. பணத்தை வாரி இறைத்து செலவு செய்வதாக அனைத்து கட்சிகளும் குற்றம்சாட்டின.
இந்நிலையில், சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சி அதிகமாக செலவு செய்த விவரம் வெளியாகியுள்ளது. இதில், அதிகபட்சமாக தி.மு.க.கட்சி ரூ.97.33 கோடி செலவு செய்துள்ளது. இதில் விளம்பரத்துக்காக மட்டும் ரூ.50.91 கோடியும், வேட்பாளர்களின் செலவாக ரூ.44.97 கோடியும் செலவு செய்துள்ளது.
அ.தி.மு.க. கட்சி ரூ.64.71 கோடி செலவு செய்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் ரூ.9.47 கோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணத்துக்காக மட்டும் செலவுசெய்யப்பட்டுள்ளது.
மேலும், பா.ஜனதா கட்சி ரூ.3.49 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.5.12 கோடியும், பா.ம.க. ரூ.3.02 கோடியும் செலவு செய்துள்ளன. இதில் தே.மு.தி.க. கட்சி மட்டும் தனது தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையத்திடம் இன்னும் அளிக்கவில்லை.
இந்த தேர்தலில், அனைத்து கட்சிகளும் சேர்ந்து, ரூ.37.88 கோடி நன்கொடையாகப் தனிநபர்கள், நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளன. அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி ரூ.13.97 கோடியும், 2-வது இடத்தில் தி.மு.க. ரூ.9.7 கோடியும், பா.ம.க. ரூ.8.27 கோடியும், அதிமுக ரூ.4.1 கோடியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரூ.3.01கோடியும் வசூலித்துள்ளன.
இது குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் என் கோபாலசாமி கூறுகையில், “ வேட்பாளர்களுக்கு தாங்கள் செய்த செலவு கணக்கை அரசியல் கட்சிகள் அளித்துள்ளன. இதில் தேர்தல் ஆணையம் சுயமாக கணக்கீடு செய்ய முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் பல வங்கிகளில் கணக்கு இருக்கலாம். அல்லது, பணமாக வேட்பாளர்களுக்கு கூட கொடுத்து இருக்கலாம். அனைத்து கட்சிகளிலும் சில வேட்பாளர்கள் மட்டுமே சுயமாக செலவு செய்து இருப்பார்கள். மற்ற வேட்பாளர்களுக்கு கட்சி மூலம் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுஇருக்கும்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து ஜனநாயக சீரமைப்புக்கானஅமைப்பின் நிறுவனர் ஜகதீப் சோக்கர் கூறுகையில், “ தேசிய, மாநில கட்சிகளுக்கு நன்கொடையாக குறிப்பாக தேர்தல் பிரசாரத்துக்கு அளித்த நபர்களின் பெயர் பட்டியலை மக்கள் பார்க்கும் வகையில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதேபோன்ற அறிக்கையையும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் செலவு செய்தலில் கட்சிகளின் வெளிப்படைத்தன்மை தெரியவரும். தேர்தலில் கருப்புபணம் முக்கிய சக்தியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது” என்றார்