பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ; ‘பொங்கல் பரிசு’ ஆக வழங்குகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் ?

By manimegalai aFirst Published Nov 22, 2021, 10:04 AM IST
Highlights


குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பொங்கல் அன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசு கடந்த வாரம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ‘பொங்கல் பரிசு’ வழங்கப்படும் என்று அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்புக்கு மக்களிடையே எதிர்ப்பு உருவாகி உள்ளது . கடந்த ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிசாமி 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் அட்டைக்கு ரூ.1,000 வழங்கினார். அதே போல 2021 ஆம் ஆண்டு அதை ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கி ஆச்சர்யப்படுத்தினார். இந்த நிலையில் திமுக அரசு தனது பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பில் பணத்தை அறிவிக்கவில்லை.தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அதாவது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது. 

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு அதாவது, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தது.இது பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திமுக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில், இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று காத்திருந்தனர். அதேபோல, எடப்பாடி பழனிசாமி கொடுத்ததை போலவே, முதல்வர் மு.க ஸ்டாலினும் பொங்கல் பரிசுப் பணம் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. வெறும் ‘பொங்கல் பரிசு’ மட்டும் என்று அரசு தரப்பில் வெளியான அறிவிப்புக்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்த போது, ‘தமிழக அரசின் ‘பொங்கல் பரிசு’ திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.தமிழக அரசின் நிதி சூழலும் சரி இல்லாத நிலையில் இருக்கிறது. இந்நிலையில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை எப்படி தொடங்குவது, அப்படியே தொடங்கினால் கூட வரிசையாக மாதந்தோறும் வழங்க முடியுமா என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்து இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும்   வரவிருக்கின்றது. அதிலும் மாபெரும் வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது திமுக தலைமை. இதனால் பொங்கல் அன்று இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1,000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.

அப்படி தொடங்கி வைத்தால் பொங்கல் பரிசாக மக்களுக்கு பணம் கொடுத்தது போலவும் இருக்கும் என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது போலவும் இருக்கும் என்று முடிவு செய்துள்ளாராம் முதல்வர். அதுமட்டும் இல்லாமல், இந்த திட்டம் வரவிருக்கின்ற ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு’ திமுகவின் வெற்றிக்கு மூலதனமாக இருக்கும் என்றும் நம்புகிறார் முதல்வர், இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது என்று கோட்டை வட்டாரத்தில் உறுதியாக கூறுகின்றனர். 

click me!