அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யுங்க... ஆளுநருக்கு பால் முகவர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!

By Asianet TamilFirst Published Mar 5, 2020, 9:42 PM IST
Highlights

இதுபோன்ற தவறான செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய காவல்துறையினர் அமைதியாக கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை காண்கையில் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக, ஆளும் வர்க்கத்தினரின் கைப்பாவையாகக் காவல்துறை இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

சிவகாசியில் செய்தியாளர் மீது நடந்த தாக்குதலுக்கு மூலக்காரணியான அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று  தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 
சிவகாசியில் குமுதம் ‘ரிப்போர்ட்டர்’ செய்தியாளர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலின் பின்னணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆவின் ஒன்றிய தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்குமான உள்கட்சி மோதல் குறித்து செய்தி வெளியிட்ட ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழின் செய்தியாளர் கார்த்தி மீது கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் தொடர்ந்து அரசியல் குண்டர்களாலும், சமூக விரோதிகளாலும் தாக்கப்பட்டு வருவது சற்றும் ஏற்புடையதல்ல.
இதுபோன்ற தவறான செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய காவல்துறையினர் அமைதியாக கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை காண்கையில் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக, ஆளும் வர்க்கத்தினரின் கைப்பாவையாகக் காவல்துறை இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.


‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழின் செய்தியாளர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், இந்தத் தாக்குதலின் மூலக்காரணியாக விளங்கும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு தமிழக அரசையும், தமிழக ஆளுநரையும் கேட்டுக் கொள்கிறோம்” என அறிக்கையில் பொன்னுசாமி  தெரிவித்துள்ளார். 

click me!